கோபேக் மோடி : மீண்டும் மோடிக்கு கருப்புக்கொடி எதிர்ப்பு..!

ஜனவரி 27 ஆம் தேதி மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடிகாட்டும் போராட்டம் நடத்தப்பட இருப்பதாக என்று பெரியாரிய உணர்வாளர்கள் சார்பில் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.

பொருளாதார அடிப்படையிலான 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டது. இதைப் பல மாநில கட்சிகள் மற்றும் சமூக நீதி இயக்கங்கள் எதிர்க்கின்றன. இதை முன்னிட்டு ஜனவரி 27 ஆம் தேதி தமிழகம் வர இருக்கும் மோடிக்குக் கருப்புக் கொடிக் காட்டி எதிர்ப்புத் தெரிவிக்கப்படும் என பெரியாரிய உணர்வாளர்கள் சார்பில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் ‘ஏற்கெனவே பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணி மற்றும் மாநாட்டை டிசம்பர் 23ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தி இருக்கிறோம். தற்போது இந்திய அரசியல் சட்டத்தின் வரையறைகளுக்கு எதிராக, இட ஒதுக்கீட்டில் வராத ஜாதிகளுக்குப் பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைத் தாக்கல் செய்து நிறைவேற்றியிருக்கிறார்கள்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஜனவரி 27ஆம் தேதி தேர்தல் பரப்புரையின் தொடக்கத்திற்கு மதுரைக்கு வரவிருக்கும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடிப் போராட்டத்தை நடத்த இருக்கிறோம்’. எனத் தெரிவித்தார்.

மேலும் பெரியார் நினைவு நாளை ஒட்டி கருஞ்சட்டைப் பேரணி நடத்தப்பட்டதைப் போல அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நீலச்சட்டைப் பேரணி ஏபரல் 7 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response