10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் : மீண்டும் போராட்டக் களத்தில் ஆசிரியர்கள்..!

7-வது ஊதியக்குழு முரண்பாடுகளை முழுமையாக களைந்திட வேண்டும் உள்ள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகப்பட்டினத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஔரித்திடலில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்கள் ரமேஷ் (தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்), சிவகுருநாதன் (தமிழக தமிழாசிரியர் கழகம்), இலட்சுமிநாராயணன் (தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), கல்யாணசுந்தரம் (தமிழக ஆசிரியர் கூட்டணி) ஆகியோர் தலைமை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், “புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

7-வது ஊதியக்குழு உயர்வில் 21 மாதகால நிலுவை தொகையை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும்.

7-வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்திட அமைக்கப்பட்டுள்ள ஒருநபர் குழு ஆசிரியர் இயக்கங்களை அழைத்து கலந்துரையாடல் செய்து முரண்பாடுகளை முழுமையாக களைந்திட வேண்டும்.

சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டுள்ள ‘நிர்வாக சீர்திருத்தம்’ என்ற பெயரில் கல்வித்துறையை குழப்பத்தில் ஆழ்த்தி நிர்வாகத்தினை சீர்குலைக்கும் அரசாணைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாத்தில் பங்கேற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Response