பாஜக அரசு சிறுபான்மையினருக்கு எதிரான ஆட்சியை நடத்துகிறது – தினகரன் சாடல்..!

பாஜக அரசு சிறுபான்மையினருக்கு எதிரான ஆட்சியை நடத்துகிறது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ தெரிவித்தார்.

கரூர் மாவட்டம், பள்ளபட்டியில் அ.ம.மு.க சார்பில் இப்தார் நோன்புத் திறப்பு நிகழ்ச்சி மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறுபான்மைப் பிரிவுச் செயலர் கே. தம்பி இஸ்மாயில் தலைமை வகித்தார். மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலர் பிஎச். சாகுல்அமீது, பள்ளபட்டி பேரூர் செயலர் டி.ஏ. சுல்தப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலருமான வி. செந்தில்பாலாஜி வரவேற்றார்.

இதில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ பங்கேற்றார். அப்போது அவர், “மத்தியில் ஆளும் பாஜக அரசு சிறுபான்மையினருக்கு எதிரான ஆட்சியை நடத்துகிறது. இதனால் சிறுபான்மையினர் அச்சத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்னும் ஓராண்டுக்குள் தேர்தல் வரும். அப்போது மத்தியில் ஆளும் அரசை தமிழகம் தீர்மானிக்கும். தமிழகத்தில் மக்கள் விரும்பாத திட்டங்களை அனுமதிக்கும் அரசு உள்ளது. தமிழகத்தில் நியாயமாகப் போராடினால் கைது செய்கிறார்கள். அமமுக எந்தக் காலத்திலும் பாஜகவுடனோ, திமுகவுடனோ கூட்டணி வைக்காது.

திமுகவை எதிர்த்துதான் எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கி, அசைக்க முடியாத ஆட்சியைக் கொடுத்தார். அவரது வழியில் ஜெயலலிதாவும் திமுகவை கடுமையாக எதிர்த்தார். எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், வராவிட்டாலும் வாக்கு வங்கி அரசியல் செய்யமாட்டோம். தமிழகத்தை அமைதிப் பூங்காவாக மாற்றச் செயல்படுவோம்” என்று அவர் தெரிவித்தார்.

தலைமை நிலையச் செயலர் பழனியப்பன், திருச்சி மனோகரன், புதிய திராவிட கட்சியின் நிறுவனர் ராஜ்கவுண்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட பேரவை துணைச் செயலர் முஜிபூர்ரக்மான் நன்றி தெரிவித்தார்.

Leave a Response