தாலிக்கு தங்கம், இலவச ஸ்மார்ட் போன் : பெண்களை கவர கர்நாடக பாஜக தேர்தல் அறிக்கை..!

கர்நாடக தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை அக்கட்சி மாநில தலைவரும், முதல்வர் வேட்பாளருமான, பி.எஸ்.எடியூரப்பா இன்று வெளியிட்டார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜக தேர்தல் அறிக்கையை பெங்களூரில் இன்று வெளியிட்டார் எடியூரப்பா. அதில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு பதிலடி தரும் வகையில் பல கவர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரூ.1 லட்சம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களும் இதில் அடங்கும். அரசு அமைந்ததும், முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும்.

பெங்களூரில் கித்தூர் ராணி சென்னம்மா பறக்கும் படை என்ற பெயரில் பெண்கள் பாதுகாப்புக்காக போலீசில் தனி பிரிவு உருவாக்கப்படும். உதவி தேவைப்படும் பெண்களை உடனடியாக இந்த படை தொடர்பு கொள்ளும்.

2023க்குள் 1.5 லட்சம் கோடி செலவில் நீர்பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

கர்நாடகாவில் சுற்றுலாவை வளர்க்க ரூ.2,500 கோடி ஒதுக்கப்படும்.

விவாக மங்கலா என்ற திட்டத்தை கொண்டுவந்து, வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள பெண்கள் திருமணத்திற்கு தாலி செய்ய உதவும் வகையில், 3 கிராம் தங்கம் மற்றும் ரூ.25,000 உதவித் தொகை வழங்கப்படும்.

பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு 1 சதவீத வட்டியில் ரூ2 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும்.

ஸ்ரீ சுவிதா திட்டம் என்ற பெயரில் திட்டம் கொண்டுவரப்படும், வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு இலவசமாகவும், பிற பெண்களுக்கு ரூ.1 விலையிலும் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும்.

முக்கிய மந்திரி ஸ்மார்ட் போன் திட்டத்தின்கீழ், வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்படும்.

நிலுவையிலுள்ள பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க பெண் அதிகாரி தலைமையில் 1000 பெண் போலீசாரை கொண்ட பிரிவு உருவாக்கப்படும்.

போன்ற பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

Leave a Response