6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி: விராட் கோலி சதம்..

large_indvssouth-13342

டர்பனில் நடைபெற்ற தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் டர்பனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். சிறப்பாக விளையாடிய டு பிளிசிஸ் 47-வது ஓவரின் 2-வது ஒரு ரன் அடித்து 101 பந்தில் சதத்தை பூர்த்தி செய்தார். சதம் அடித்த பின்னர் டு பிளிசிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 112 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 120 ரன்கள் சேர்த்தார். தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்துள்ளது. தென்னாப்ரிக்கா அணி கடைசி 5 ஓவரில் 46 ரன்கள் குவித்தது. அதைத்தொடர்ந்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாட தொடங்கியது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். ரோகித் சர்மா 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் தவானுடன், கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்திய அணியின் ஸ்கோர் 67 ஆக இருந்த பொழுது ஷிகர் தவான் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அவரைத்தொடர்ந்து ரகானே களமிறங்கினார். இருவரும் நிதானமகா விளையாடி ரன் குவித்தனர். விராட் கோலி அரைசதம் கடந்தார். தொடர்ந்து எதிர்முனையில் சிறப்பாக விளையாடிய ரகானேவும் அரைசதம் அடித்தார். 41-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடித்த கோலி சதத்தை பூர்த்தி செய்தார். இது ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் 33-வது சதமாகும். இந்திய அணி 45.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்தது. வெற்றி ரன்களை டோனி அடித்தார். இதன்மூலம் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Response