கரும்பு விவசாயிகளின் பண பாக்கியைக் கொடுக்காத தனியார் சர்க்கரை ஆலைகள்மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக கடலூரில் இன்று, சிதம்பரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் கரும்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாலகிருஷ்ணன், ”2017 -18 பருவ கரும்பு, டன் ஒன்றுக்கு ரூபாய் 4,000 ஆக விலையை அரசு அறிவிக்க வேண்டும். தனியார் சர்க்கரை ஆலைகள், 2013 – 17 கரும்பு பண பாக்கியான ரூ.1,630 கோடியை உடனே வழங்க வேண்டும். எடை மோசடியைத் தடுக்க அரசே தனியார் சர்கரை ஆலைகளில் எடைமேடை அமைக்க வேண்டும். 2004-05, 2008-09 ஆண்டுக்கான லாபத்தின் பங்குத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
தமிழகத்தில் வருவாய் பங்கீட்டு முறையை அமல்படுத்தினால், கரும்பு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அதனால், மாநில அரசு வருவாய் பங்கீட்டு முறையை அமல்படுத்தக்கூடாது. தனியார் சர்க்கரை ஆலைகள், கடந்த நான்கு ஆண்டுகளாக மாநில அரசு அறிவித்த விலையைத் தராததால், கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1,384 கோடி பாக்கி உள்ளது. அதைக் கொடுக்காத தனியார் சர்க்கரை ஆலைகள்மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகள் தரவேண்டிய 218 கோடி ரூபாயையும் உடனடியாக வழங்க வேண்டும். 2006-ம் ஆண்டுக்குப் பிறகு உரிமம் பெற்ற தனியார் ஆலைகள், பண பாக்கியை தரவில்லையென்றால், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு பகுதியை சர்க்கரைத்துறை ஆணையமும், மாவட்ட வருவாய்த்துறையும் ஏன் திரும்பப் பெறவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.