சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆகியவற்றுக்கு மொத்தம் 75 நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளது. அதில் தற்போது 54 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 21 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில், உச்சநீதிமன்ற பரிந்துரையின்படி, மாவட்ட நீதிபதிகளாக பணிபுரிந்து வரும் 6 பேரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்து மத்திய சட்ட அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, எஸ். ரமாதிலகம், ஆர். தரணி, ஆர். ராஜமாணிக்கம், டி. கிருஷ்ணவள்ளி, பொங்கியப்பன் மற்றும் ஹேமலதா ஆகிய ஆறு பேர் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இன்று காலை பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இவர்கள் 6 பேரும் நீதிபதியாக பதவியேற்க உள்ளதை அடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயரும். இதையடுத்து, பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 11 ஆக உயருகின்றது. இன்னும் 15 நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளன.