தமிழக மீனவர்கள் 15 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஈரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆண்டனி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;
தமிழகத்தை சேர்ந்த கிளாடின், பெல்சன், செங்கிஸ்கான், உதயகுமார், பாக்கியம் உள்பட 15 மீனவர்கள் துபாயில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர். கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ஈரான் கடற்படையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
10 நாட்கள் வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் பின்னர் அவர்களது படகில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களது செல்போன்களை கடற்படையினர் எடுத்துச்சென்றுவிட்டனர். மேலும் முறையான உணவும் வழங்கப்படவில்லை என பிடிபட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களில் 5 பேர் நெல்லை மாவட்டத்தையும், 2 பேர் தூத்துக்குடி மாவட்டத்தையும், 8 பேர் குமரி மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.