டெல்லியில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து கார்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் நவம்பர் 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையில் ஐந்து நாட்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் கடந்த சில தினங்களாக கடும் காற்று மாசு காணப்படுகிறது. காற்று தரக் குறியீடு (ஏக்யூஐ) 474 என்ற அளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக டெல்லியில் 200 மீட்டருக்கு அப்பால் உள்ள எதையும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புகை போன்று காற்று மாசு சூழ்ந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து காற்று மாசை குறைப்பதற்காக நவம்பர் 13 முதல் 17-ம் தேதி வரை ஐந்து நாட்கள் கார்களுக்கு கட்டுப்பாடு விதிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ஒன்றை இலக்க தேதிகளில் ஒன்றை இலக்க எண் கொண்ட கார்கள் அனுமதிக்கப்படும். இரட்டை இலக்க தேதிகளில் இரட்டை இலக்க எண் கொண்ட கார்கள் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள், காஸ் மூலம் இயங்கும் கார்கள், இருசக்கர வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் இதுபற்றி டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் ட்விட்டரில் கூறியுள்ளதாவது:
”டெல்லியில் கார்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் நவம்பர் 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையில் ஐந்து நாட்கள் பொது போக்குவரத்தை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் அந்த 5 நாட்களும் டெல்லியில் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம்” எனக் கூறியுள்ளார்.