தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அண்ணா சாலை, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, ஜிஎஸ்டி சாலை, வால்டாக்ஸ் சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மணலி நெடுஞ்சாலை, வடபழனி ஆற்காடு சாலை உள்ளிட்ட பெரும்பாலான சாலைகள் சேதமடைந்துள்ளன. அவை மேடும், பள்ளமுமாக காட்சி அளிப்பதுடன், ஜல்லிக் கற்களும் பெயர்ந்துள்ளன.
ஆவடி பகுதியில் நேற்று காலையில் சென்று கொண்டிருந்த சிறிய பேருந்து மழை நீரில் சிக்கிக் கொண்டது. பயணிகளை அதிகாரிகள் பாதுகாப்பாக இறக்கி விட்டனர். இதையடுத்து, சிறிய பேருந்துகளின் சேவை சில இடங்களில் நேற்று கணிசமாக குறைக்கப்பட்டது.
இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘சென்னையில் இயக்கப்படும் சிறிய பேருந்துகள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. கோடம்பாக்கம், அம்பத்தூர், மாங்காடு, திருவேற்காடு, வேளச்சேரி, கோயம்பேடு, பெரம்பூர், மேடவாக்கம், அஸ்தினாபுரம், ஆவடி, பூவிருந்தவல்லி, பெருங்களத்தூர் உட்பட பல்வேறு இடங்களில் சுமார் 200 சிறிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேடு பள்ளங்கள்:-
சமீபத்தில் பெய்து வரும் கன மழையால் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. சில உட்புற சாலைகளில் சிறிய பேருந்துகள் செல்ல முடி யாத அளவுக்கு மேடு, பள்ளங் கள் உள்ளன. எனவே, பயணிகள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஒரு சில இடங்களில் மட்டும் சுமார் 30 சிறிய பேருந்துகளின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மழைநீர் வடிந்தவுடன் மீண்டும் முழு அள வில் சிறிய பேருந்துகள் இயக்கப்படும்’’ என்றனர்.