வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து சென்னையில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக கனமழை கொட்டி வருகிறது. கனமழையால் சென்னைக்கு கிடைத்த சுமார் 3.75 டி.எம்.சி., அளவிலான தண்ணீரானது கூவம் மற்றும் அடையாறு ஆறுகள் மூலம் கடந்த இரண்டு தினங்களில் கடலில் கலந்து வீணாகியுள்ளது. தமிழக அரசு முறையான கட்டமைப்பு வசதிகளை செய்யாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த 26-ம் தேதி துவங்கியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 29-ம் தேதி இரவு முதல் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் சிறிய நீர்நிலைகள் நிரம்பி அதிலிருந்து உபரிநீர் வெளியேறுகிறது. குடியிருப்புக்களில் போதிய மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாததால், மழைநீர் கால்வாய்கள் மூலம் சென்னையின் முக்கிய ஆறுகளான கூவம் மற்றும் அடையாறு வழியே வீணாகி சென்று கடலில் கலந்து வருகிறது.
அரசின் மெத்தன போக்கால் கடந்த இரண்டு தினங்களாக, சென்னையின் முக்கிய நீர்வழிதடமான கூவத்திலிருந்து வினாடிக்கு, 6,500 கன அடி தண்ணீரும், அடையாறு ஆற்றிலிருந்து 14,000 கன அடி தண்ணீரும்,, பக்கிங்ஹாம் கால்வாயிலிரிருந்து 1,400 கன அடி நீரும் கடலுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு தினங்களாக, கூவம், அடையாறு, பக்கிங் ஹாம் கால்வாய் ஆகிய மூன்று நீர்வழித்தடங்கள் மூலம் சுமார் 21 ஆயிரத்து, 900 கன அடி நீர் வீதம் மழை நீரானது கடலுக்கு சென்று வீணாகி வருவது குறிப்பிடத்தக்கது. 2 நாள் மழைக்கே சுமார் 3.75 டி.எம்.சி நீர் வீணாகி கடலுக்கு சென்று விட்ட நிலையில், டிசம்பர் வரை தொடர உள்ள வட கிழக்கு பருவமழை முடிவதற்குள் இன்னும் பல டி.எம்.சி தண்ணீர் வீணாகும் சூழல் உருவாகியுள்ளதாக சமூக ஆர்லவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.