பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய வழக்கில், அதிமுக மாஜி துணை மேயரின் சிறைத்தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி முன்னாள் துணைமேயர் ஆசிக் மீரா. முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சையின் மகன். இவர் சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த துர்கேஸ்வரியை, காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்துள்ளார். இதில் துர்கேஸ்வரி கர்ப்பமானார். ஆனால் திருமணம் செய்யாமல் ஏமாற்றியுள்ளார். இதனிடையே துர்கேஸ்வரிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவின்பேரில் ஆசிக் மீரா உள்ளிட்டோர் மீது பொன்மலை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நடந்தது. இதில் கடந்த செப்.15ல் தீர்ப்பளித்த நீதிமன்றம், ஆசிக் மீராவுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தார். இவரது மாமியார் மைமூன் பேகத்திற்கு 10 ஆண்டு சிறை, நண்பர்கள் பாபு, சரவணன் ஆகியோருக்கு 7 ஆண்டு சிறை, தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ஆசிக் மீரா, மைமூன் பேகம், சரவணன் ஆகிய 3 பேரும் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.எம்.பசீர் அகமது, இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் மனுவின் மீது தீர்ப்பளிப்பதாக கூறி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.