சமூக வலைதளங்களில் மிக மோசமாக பதிவிடுவது தவறான நடைமுறை. இதற்கெல்லாம் நான் அசர மாட்டேன், என் நிலைப்பாட்டில் இருந்தும் பின்வாங்க மாட்டேன் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
திருச்சி விமானநிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”ஒரு கருத்துக்கு எதிர் கருத்து கூறுவது இயல்பானது. அவ்வாறு கூறியதற்காக, தொடர்ந்து தொலைபேசியில் அழைத்து தரக்குறைவாக திட்டுவது, கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவது, சமூக வலைதளங்களில் மிக மோசமாக பதிவிடுவது தவறான நடைமுறை. இதற்கெல்லாம் நான் அசர மாட்டேன், என் நிலைப்பாட்டில் இருந்தும் பின்வாங்க மாட்டேன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக கூறினேன். அப்படி நடக்கவில்லை என்றால் ஆதாரப்பூர்வமாக நிரூபியுங்கள்.
வடகிழக்கு பருவமழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேசிய கட்சி, தமிழகத்தில் காலூன்றும் என்றால் அது பாஜகதான்” என்று தமிழிசை கூறினார்.