தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதால், இந்த அரசு கவிழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் இந்த நெருக்கடி குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். வருகிற 28 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் எம்.எல்.ஏ.க்கள் , எம்.பி.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
தொடர்ந்து தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுத்து வரும் டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களை எப்படி சமாளிப்பது என்பத குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.