பள்ளி மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் விவரங்களை தமிழில் குறிப்பிடும் முறை ஏற்கனவே இருக்கிறது. அதை தொடர்ந்து, மாற்றுச்சான்றிதழிலும் தமிழில் பெயர் விவரங்கள் இடம்பெறவிருக்கிறதாம்!
இது குறித்து, அரசு தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தராதேவி, பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இந்த ஆண்டு முதல் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழில் அவர்களின் தலைப்பெழுத்துடன் (initial) கூடிய பெயர் குறிப்பிடப்பட்டு வழங்கப்படுகிறது. தமிழ்ப் பெயரில் ஏற்படும் சில எழுத்துப் பிழைகளைத் தவிர்க்கும் பொருட்டு, மாணவர்களுக்கு பள்ளிகளால் வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழ்களில் (Transfer certificate) இனிமேல் பெயர்களைத் தலைப்பெழுத்துடன் தமிழில் குறிப்பிட்டு வழங்குமாறு அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எஸ்எஸ்எல்சி தேர்வெழுத குறைந்தபட்ச கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி என்று நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், பள்ளியில் படித்து 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 9 மற்றும் 10-ம் வகுப்பு படித்து இடையில் நின்றவர்கள் மற்றும் பள்ளி மாணவராக 10-ம் வகுப்பு தேர்வெழுதுவோர் ஆகியோருக்கும் பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழ்களில் தமிழில் தலைப்பெழுத்துடன் பெயர் குறிப்பிட்டு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.