Ilayathalapathy’s brother breaks the rules:

விதிகளை மீறி போலீசாரிடம் சண்டையிட்ட நடிகர் விஜயின் தம்பி விக்ராந்த்:

புதுச்சேரிக்கு சென்ற நடிகர் விக்ராந்த், நோ-பார்க்கிங்கில் காரை நிறுத்தியதோடு, அது கூடாது என்று கூறிய போலீஸாரிடமும் சண்டைக்குப் போனார். இதனால் கோபமடைந்த போலீஸார், விக்ராந்த்தின் காரை எஸ்.பி. அலுவலகத்திற்குக் கொண்டு போய் விட்டனர். அங்கு நடிகருக்கு அபராதம் விதித்து அதை வசூலித்த பின்னர் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

நடிகர் விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த். இவரும் நடிகர். கோரிப்பாளையம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் தனது குடும்பத்துடன் புதுச்சேரிக்கு நேற்று வந்தார். வந்தவர் நேரு வீதியில் நோ பார்க்கிங் என்று போடப்பட்டிருந்த இடத்தில் தனது காரை நிறுத்தினார். இதைப்பார்த்த போலீஸார் மைக் மூலம், அது நோ பார்க்கிங் காரை நிறுத்தாதீர்கள் என்று கூறினர். ஆனால் அதை விக்ராந்த் கேட்கவில்லை.

இதையடுத்து காரை நோக்கி விரைந்து வந்த போலீஸார் விக்ராந்த்திடம் காரை எடுக்குமாறு கூறினர். ஆனால் அவர்களைப் பார்த்து விக்ராந்த் கோபமாக பேசியதாக கூறப்படுகிறது. இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.

இதைத் தொடர்ந்து விக்ராந்த்தின் காரை டோ செய்து எஸ்.பி. அலுவலகத்திற்குக கொண்டு சென்றனர் போலீஸார். அங்கு விக்ராந்த்திடமும், போக்குவரத்து போலீஸாரிடமும் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் விசாரணை நடத்தினார்.

அதன் பின்னர் விக்ராந்த்துக்கு நோ பார்க்கிங்கில் காரை நிறுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சமூகத்தில் பிரபலமாக இருக்கும் உங்களைப் போன்றவர்கள், பொதுமக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும், நீங்களே விதிமுறைகளை மீறுவது சரியா என்றும் இன்ஸ்பெக்டர் கேட்டார். இதுபோல மீ்ண்டும் நடக்கக் கூடாது என்றும் எச்சரிக்கையும் விடுத்து அனுப்பி வைத்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார் விக்ராந்த்.