தமிழகத்தில் சுமார் 38 ஆயிரம் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க ஆண்டுதோறும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் சில பள்ளி வாகனங்கள் விபத்துகளில் சிக்குகின்றன.
குறிப்பாக, கடந்த 25-ம் தேதி கேளம்பாக்கம் அருகே, மாணவிகளை பள்ளிக்கு அழைத்துச் சென்ற தனியார் வேன், சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒரு மாணவி பலியானார். ஓட்டுநரை கைது செய்து விசாரித்ததில், அவருக்கு ஓட்டுநர் உரிமமே இல்லை என தெரியவந்தது.
இந்நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்டிஓ) சார்பில் பள்ளி வாகனங் களில் தீவிரமாக ஆய்வு நடத்தப் பட்டு வருகிறது. வடசென்னை வட்டார போக்குவரத்து அலுவலகத் துக்கு உட்பட்ட பகுதிகளில் ஆர்டிஓ ஜி.அசோக்குமார், வாகன ஆய்வாளர்கள் சுந்தரமூர்த்தி, ஆனந்த், ஜெயலட்சுமி ஆகியோர் வியாசர்பாடி, கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
வட்டார போக்குவரத்து அலுவலர் ஜி.அசோக்குமார் கூறும்போது, “வியாசர்பாடி, கொளத்தூர், எம்.கே.பி.நகர், மாதவரம் ரவுண்டானா உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக பள்ளி வாகனங்களில் ஆய்வு நடத்தி வருகிறோம். வாகனங்களில் டயர்கள், அவசர கால கதவு, ஜன்னல்கள், படிகள், தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி, ஹேண்ட் பிரேக், ஓட்டுநர்களின் கண் பார்வை, வேகக்கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தினோம். இதில் 20 வாகனங்களில் சிறிய குறைபாடுகள் இருந்தன. அவற்றை சரிசெய்து இயக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளோம்.
மேலும், பெரிய அளவில் குறைபாடுகள் இருந்த 12 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளோம்” என்றார்.