தமிழக உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி. பிரிவினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கவில்லை என்று கூறி தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்பிரிவுகளை பின்பற்றி பிறப்பிக்கப்பட வில்லை என்றும், அதனால், இந்த தேர்தல் அறிவிப்பை ரத்து செய்தும் உத்தரவிட்டா.
இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்தன. இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. அதேபோல உரிய காலக்கெடுவுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி திமுக சார்பில் மேலும் ஒரு மனுவும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கக்கூடாது என மாற்றம் இந்தியா அமைப்பின் சார்பில் ஒரு மனுவும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள் மற்றும் பெண்களுக்கு துணைத் தலைவர் பதவிகளில் உரிய பிரதிநிதித்துவம் தரக்ககோரி வழக்கறிஞர் பழனிமுத்து சார்பில் ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுபோல மேலும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கு விசாரணையும் நிலுவையி்ல் இருந்து வருகிறது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அனைத்து மனுக்களின் மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் நடந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.குமார், தமிழக அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசாமி, திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மற்றும் பிற மனுதாரர்கள் தரப்பி்ல் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஆர்.சந்திரன், எம்.பழனிமுத்து உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.
அதன் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றால் மாநில தேர்தல் ஆணையத்துக்கு 50 நாள்கள் முழுமையாக கால அவகாசம் வேண்டும் என மூத்த வழக்கறிஞர் பி.குமார் தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கை ஆகஸ்டு 1-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், உள்ளாட்சி தேர்தலுக்கான உத்தேச கால அட்டவணையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.