சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் ஏலமா !

chennai-central
இந்தியாவில் அதிகமான தொழிலாளர்களை கொண்ட பொதுத்துறை நிறுவனமான இந்திய ரெயில்வே துறையிலும் தனியார்மயம் தலைதூக்கியுள்ளது. ரெயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர்கள், கார்டுகள், என்ஜின் டிரைவர்கள் உள்ளிட்ட பணியிடங்களில் மட்டுமே தற்போது நேரடியாக ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

ரெயில்வேயின் பிற பிரிவுகளில் உள்ள வேலைவாய்ப்புகள் அனைத்தும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரெயில் நிலையங்களை தனியாருக்கு கொடுக்க ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்திய ரெயில்வேயில் 7,600 ரெயில் நிலையங்கள் உள்ளன. இதில் 75 ரெயில் நிலையங்கள் அனைத்து வசதிகளுடன் கூடிய ஏ-1 பிரிவை சேர்ந்தது. 332 ரெயில் நிலையங்கள் ஏ பிரிவை சேர்ந்தவை.

தென்னக ரெயில்வேயில் 608 ரெயில் நிலையங்கள் உள்ளன. இதில் 8 ரெயில் நிலையங்கள் ஏ-1 பிரிவிலும், 42 ரெயில் நிலையங்கள் ஏ பிரிவிலும் உள்ளன. தற்போது 23 ரெயில் நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட உள்ளது. இதில் தென்னக ரெயில்வேயில் சென்னை சென்டிரல் மற்றும் கோழிக்கோடு ரெயில் நிலையங்கள் தனியாருக்கு கொடுக்கப்பட உள்ளது.

ரெயில் நிலைய வளர்ச்சித்திட்டத்தின்படி, தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 23 ரெயில் நிலையங்கள் தனியாருக்கு 45 வருடங்களுக்கு குத்தகைக்கு விடப்படும். கிழக்கு மண்டல ரெயில்வேயில் ஹவுரா ரெயில் நிலையம் ரூ.400 கோடிக்கும், தென்னக ரெயில்வே மண்டலத்தில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம், மூர் மார்க்கெட் வளாகத்தின் தரைத்தளம் ஆகியன ரூ.350 கோடிக்கும் ஏலம் விடப்பட உள்ளது.

இந்திய ரெயில்வேயில் இந்த 2 ரெயில் நிலையங்களுக்கு மட்டுமே அதிகபட்ச ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தென்னக ரெயில்வேயில் உள்ள கோழிக்கோடு ரெயில் நிலையம் ரூ.75 கோடிக்கு ஏலம் விடப்பட உள்ளது.

Leave a Response