மார்ச் 16-ல் ‘பாகுபலி 2’ ட்ரெய்லர் வெளியாகும்…

bahubali-part-2-1000x600
ராஜமெளலி இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘பாகுபலி 2’ ட்ரெய்லர், மார்ச் 16-ம் தேதி வெளியாகவுள்ளது.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான படம் ‘பாகுபலி’. ராஜமெளலி இயக்கிய இப்படத்தை ஷோபு மற்றும் பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்திருந்தார்கள். தமிழில் ஞானவேல்ராஜாவும் இந்தியில் கரண் ஜோஹரும் இப்படத்தை வெளியிட்டார்கள்.

உலகளவில் சுமார் 600 கோடி ரூபாய் வசூல் செய்து இந்தியாவில் தயாரான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்தது. இதனால், ‘பாகுபலி 2’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.

அனுஷ்கா பாத்திரத்தின் பின்னணி என்ன? கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு ‘பாகுபலி தி கன்க்ளூஷன்’-ல் விடை தெரியவிருக்கிறது. மொத்த படப்பிடிப்பும் முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இத்திரைப்படம் ஏப்ரல் 28-ல் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. படத்தின் ட்ரெய்லர் எப்போது என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், மார்ச் 16-ம் தேதி ட்ரெய்லர் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

பல்வேறு திரையரங்குகளில் காலையில் ட்ரெய்லரை திரையிடவும், மாலையில் இணையத்தில் வெளியிடவும் ‘பாகுபலி 2’ படக்குழு திட்டமிட்டுள்ளது. ‘பாகுபலி’ பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் பிரபாஸ்.

Leave a Response