சசிகலாவை முதல்வராக அமர்த்துவது என்ற சொல்லுக்கு மக்கள் மனதில் எதிர்மறை கருத்தை உருவாக்கியுள்ளது – ஜி.ராமகிருஷ்ணன்

G Ramakrishnan
திருவாரூரில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கீழே குறிப்பிட்டவாறு பேசினார்:

“தமிழகத்தில் கடந்த 100ஆண்டுகளில் இல்லாத அளவில் வறட்சி ஏற்பட்டுள்ளது. பயிர்கள் பாதித்துள்ள வேதனையில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

ஆனால் தமிழக அரசு 17 விவசாயிகளின் குடும்பங்களுக்கு மட்டும் நிவாரணம் அறிவித்திருப்பது வேதனை அளிக்கிறது. மேலும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 5,465 அறிவித்திருப்பதும் விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை.

விவசாயிகளின் கோரிக்கை படி ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

மத்திய அரசு, பட்ஜெட்டில் பொது மக்கள் நேரடியாக செலுத்தும் கலால் வரியை கூடுதலாக ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் உயர்த்தி உள்ளது. இவற்றை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் மறியல் போராட்டம் நடக்கிறது.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சசிகலாவுக்கு எந்த ஒரு பதவியும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறாமல் சசிகலா முதல்வராக பதவி ஏற்க உள்ளது மக்கள் மனதில் எதிர்மறையான கருத்தை உருவாக்கியுள்ளது.”

இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Response