மொழி, அபியும் நானும், பயணம் போன்ற சிறந்த படங்களை இயக்கிய ராதா மோகன் ‘உப்புக்கருவாடு’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். எம்.எஸ். பாஸ்கர் முதல் கருணாகரன் வரை பேசிய அனைவருமே ராதாமோகனை புகழ்ந்து தள்ளிவிட்டனர். அவருடைய அனைத்து படங்களிலும் நடித்துள்ளோம், இனிமேலும் நடிக்கவேண்டும் என்று அடுத்த படத்திற்கும் இப்பொழுதே அச்சாரமும் போட்டுவிட்டனர்.
ராதா மோகன் படத்தை பற்றி பேசியபோது, இந்த படத்தின் கதையை எழுதும் போதே என் நினைவில் உதித்தவர் நந்திதா தான். அவருக்காவே இந்த கதையை எழுதினேன். அதன் பிறகு அவரை இப்படத்தில் நடிக்க அழைக்கலாம் என நினைக்கும்போது ஒரு சிறிய தயக்கம். பொதுவாக நடிகைகள் பெரிய நடிகர்களுடன் நடித்துவிட்டால் அமீர்கானுடன் நடித்துவிட்டேன், ஷாருக்கானுடன் நடித்துவிட்டேன், சல்மான்கானுடன் நடித்துவிட்டேன் என அலட்டிகொள்வார்கள். ஆனால், நந்திதா அப்படி இல்லை, கதையை கேட்டதுமே ஒப்புக்கொண்டுவிட்டார். நான் நினைத்ததுபோலவே கதாப்பாத்திரத்திற்கும் மிகச்சரியாக பொருந்திவிட்டார். எனப் பேசிமுடித்தார்.
அதன்பிறகு பத்திரிக்கையாளர்கள் கேள்வி நேரத்தில், நந்திதாவை நினைத்துக்கொண்டே தான் இந்த படத்தின் கதையை எழுதி முடித்தீர்களா? எனக்கேட்டவுடன், ஐயோ அப்படி எல்லாம் இல்ல. அந்த கதையே எழுதும்போது, நந்திதா நடித்தால் நன்றாக இருக்கும் எனத்தோன்றியது அவ்வளவு தான். இந்த விழாவிற்கு என்மனைவியும் வந்துள்ளார். அங்கு தான் அமர்ந்திருக்கிறார் என்று நெளிந்தவாறே பதில் சொன்னார்.