பாரதிராஜாவின் சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய பாக்யராஜ்..!

பிரபல நட்சத்திரங்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களை கேட்டால் எப்போதுமே ஆச்சர்யங்கள் நிறைந்ததாக இருக்கும்.. அப்படித்தான் நேற்று கார்த்திக் சுப்புராஜ் நிறுவியுள்ள ‘ஸ்டோன் பெஞ்ச்’ நிறுவன துவக்க விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது சிஷ்யரான பாக்யராஜின் சாமர்த்தியத்தை மெச்சி பாராட்டினார்.

“நான் இரண்டு படங்களையும் வெற்றிப்படங்களாக தந்துவிட்டு மூன்றவதாக ஒரு படத்திற்கு அழைப்பு வந்ததும் அங்கே சம்பளம் பேச போனேன்.. நாம் சம்பளத்தை அதிகமாக கேட்டால் வாய்ப்பு போய்விடுமோ என்று பயந்துகொண்டே 15ஆயிரம் பேசிவிட்டு வந்துவிட்டேன். என் ஆபீஸுக்கு வந்ததும் எவ்வளவு சம்பளம் பேசினீர்கள் என பாக்யராஜ் கேட்டான்.

விஷயத்தை சொன்னதும்.. அட ஏங்க சார்.. உங்க வேல்யூ உங்களுக்கே தெரியலை.. நான் போய் பேசி சம்பளத்தை அதிகம் கேட்குறேன் என நான் தடுத்தும் கூட கேட்காமல் கிளம்பிவிட்டான். என்ன பேசிவிட்டு வந்தானோ தெரியவில்லை, அந்த கம்பெனியில் மறுபடியும் அழைத்து எனக்கு 3௦ஆயிரம் சம்பளம் தந்தார்கள்.. அதுதான் ‘நிறம் மாறாத பூக்கள்’ படம்.. அப்படிப்பட்ட சாமர்த்தியசாலிதான் என் உதவி இயக்குனர் பாக்யராஜ்” என்று தனது சீடனின் பிரதாபத்தை பாராட்டினார் பாரதிராஜா.