தயாரிப்பாளரான தன் உதவியாளருக்கு ரஜினி வாழ்த்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் உதவியாளராக இருந்த ஜெயராமன், ‘கிருமி’ படத்தின் மூலமாக தயாரிப்பாளராகி இருக்கிறார். அவரை நேரில் அழைத்து வாழ்த்தியிருக்கிறார் ரஜினி. இந்தப்படத்தில் ‘மதயானைக்கூட்டம்’ படத்தில் நாயகனாக நடித்த கதிர் கதாநாயகனாக நடிக்கிறார். ரேஸ்மி மேனன்தான் நாயகி.

பி.சி.ஸ்ரீராமின் மாணவர் அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, கே இசை அமைக்கிறார். அனுசரண் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இவர் ஆஸ்திரேலியாவில் திரைப்படம் சார்ந்த படிப்பை முடித்ததுடன் பல குறும்படங்கள் ,மியூசிக் வீடியோக்களும் இயக்கியுள்ளார்.

‘கிருமி’ படம் பற்றி இயக்குநர் கூறும் போது “இது முழுக்க முழுக்க சென்னைப் பின்னணியில் உருவாகியுள்ள படம். நல்ல வேலைக்காகக் காத்திருக்கும்.கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு திறமைசாலி இளைஞனுக்கு நடக்கும் சில சம்பவங்கள். அவன் கடந்து போகும் சில அத்தியாயங்கள்தான் கதை.

தயாரிப்பாளரான அனுபவம் பற்றி ‘ரஜினி’ ஜெயராமன் கூறும்போது. “இது எங்கள் முதல் முயற்சி. கதை பிடித்திருந்தது. இந்தக் காலத்துக்கும் ஏற்றமாதிரி இருந்தது. படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது. படம் தயாரிப்பது பற்றி ரஜினி சாரிடம் கூறினேன். மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவர் இல்லாமல் எனக்கு எதுவும் இல்லை. இந்தப் பெயர், முகவரி அவர் கொடுத்ததுதான். நல்லா பண்ணு இந்தக்காலத்துக்கு ஏற்றமாதிரி படம் இருக்கட்டும் செலவு செய்வதில் கவனமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறி. வாழ்த்தினார் ரஜினி” என்று கூறினார்.