வைரமுத்து பாடலை இளையராஜா பாடுவாரா..?

மூன்று படங்களை இயக்கினாலும் இருபது படங்களை இயக்கியவர்போல ரசிகர்களின் மனதில் ஒரு நிலையான இடத்தை பிடித்துவிட்டார் சீனுராமசாமி.. தேசியவிருது பெற்ற இயக்குனரான இவர் தற்போது தனது நான்காவது படமாக ‘இடம் பொருள் ஏவல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இவரது முந்தைய படங்களுக்கு இசையமைத்த ரகுநந்தன் இந்தப்படத்திற்கு இசையமைக்கவில்லை. ஆனால் இந்தமுறை அவர் கைகோர்த்திருப்பது யுவன் சங்கர் ராஜாவுடன். இதில் தத்தெடுத்த மகனைப் பற்றிய உறவை மையப்படுத்தி ஒரு தாயின் பாடல் இடம்பெறுகிறது. இதை கவிப்பேரரசு வைரமுத்து எழுத, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். எல்லாம் கூடி வந்தால் இந்தப்பாடலை இசைஞானி இளையராஜாவை பாடவைக்கும் யோசனையில் இருக்கிறார் சீனுராமசாமி.

“இந்தப் பாடலை யாரைப் பாடவைக்கலாம் என்ற யோசனையில் என் ஆழ்மனதில் தோன்றியவர் இசைஞானி இளையராஜா அவர்கள். இதை இப்படத்தின் இசை அமைப்பாளர் திரு. யுவனிடமும், தயாரிப்பாளர் திரு.லிங்குசாமியிடமும் தெரியப்படுத்தினேன். யுவன் தன் அப்பாவிடம் நான் கேட்கிறேன் என்றார். எனக்கு அளவற்ற மகிழ்ச்சி. தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற கள்ளிக்காட்டில் பொறந்த தாயே மாதிரியான ஒரு பாடலை இசைஞானி பாடினால் எப்படி இருக்கும்! ஆனால் சில நண்பர்கள் இதனை வேறுமாதிரித் திரித்து எழுதிவருகின்றனர். இதை, பகை முற்றுப்பெற்ற காலமாக நான் பார்க்கிறேன். இரண்டு பெருங்கலைஞர்களின் பெருந்தன்மை சம்மந்தப்பட்ட விஷயம் இது. நான் இருவரிடமும் வரம் கேட்கும் நிலையிலேயே இருக்கிறேன்.

“பகைத் தீயை வளர்ப்பவர் மூடர்!” – என்ற பாரதியின் வரிகளே என் நினைவுக்கு வருகின்றன. இணைத்து வைக்கும் கரங்களே, என்னை ஆசீர்வதியுங்கள்!” என தனது கனவு நனவாகுமாறு வேண்டுகிறார் சீனு ராமசாமி. இனிமேலும் இசைஞானி – வைரமுத்து இணைப்பு சத்தியமா.?