சின்னத்திரையில் வெற்றியை ருசித்துவிட்டு வெள்ளித்திரைக்குள் காலடி எடுத்து வைக்கும் ஆசை பல இயக்குனர்களுக்கு இருக்கும். மங்கை அரிராஜன், மெட்டி ஒலி திருமுருகன் எல்லாம் இப்படி வந்தவர்கள்தான். அவர்கள் வரிசையில் இப்போது இடம் பிடித்திருப்பவர் யு.பி.மருது..
இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி பெண்களின் ஆதரவைப்பெற்ற “அத்திப்பூகள்” என்ற வெற்றி தொடரை இயக்கியவர்.
இப்போது ‘அகத்திணை’ என்ற படத்தை இயக்குவதன் மூலம் வெள்ளித்திரைக்கு வருகிறார்..
அகத்திணை என்பதற்கு ஒழுக்கமான காதல் என்று அர்த்தம். பழந்தமிழ் இலக்கியத்தில் காதல் பற்றிய உணர்வுகளை அகத்திணையில் பாடப்பட்டுள்ளதால் கதைக்கு பொருத்தமாக இருக்குமென்று ‘அகத்திணை’ என்று பெயர் வைத்துள்ளாராம்.
தன் மனைவியை இழந்து தன் மகளுக்காகவே ஒவ்வொரு நொடிப்பொழுதும் தன்னை அர்ப்பணித்து பாதுகாத்து பாசத்துடன் வாழும் தந்தையின் பாசம் ஒருபக்கம்… காதல் மறுபக்கம்,…. காதலா, பாசமா என்று மகள் எடுக்கும் முடிவு, இறுதியில் என்ன விளைவை ஏற்படுத்தியது என்பது கதை. தந்தையாக ஆடுகளம் நரேன் நடிக்கிறார்.
கதாநாயகியாக மகிமா நடிக்க, கதாநாயகனாக வர்மா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். வைரமுத்து பாடல்களை எழுத மரியா மனோகர் இசையமைக்கிறார். சின்னத்திரையில் ‘அத்திப்பூக்கள்’ மூலமாக ஆதரவு கொடுத்த மக்கள் வெள்ளித்திரையில் ‘அகத்திணை’க்கும் ஆதரவு கொடுப்பார்கள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில் இருக்கிறார் மருது.