தேனியில் உள்ள தியேட்டர் மீது ‘அதிதி’ தயாரிப்பாளர் திருட்டு விசிடி புகார்..!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நந்தா, அனன்யா நடித்த ‘அதிதி’ திரைப்படம் ரிலீஸானது. மலையாளத்தில் வெளியான ‘காக்டெயில்’ என்ற படத்தின் ரீமேக்கான இந்தப்படம் தமிழில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ‘அதிதி’ படத்தின் தயாரிப்பாளர் தரப்பு சார்பாக தேனியில் உள்ள ஒரு தியேட்டர் மீது திருட்டு விசிடி தயாரிக்க உடந்தையாக இருந்ததாக தேனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

“நாங்கள் UFO நிறுவனத்தினரிடம் எங்களது திரைப்பட விநியோக உரிமையை கொடுத்திருந்தோம். சாட்டிலைட் மூலம் தியேட்டர்களில் திரையிடப்படும் இந்த முறையில் தேனியில் உள்ள சுந்தரம் தியேட்டரும் இந்தப்படம் திரையிடப்பட்டது. படம் வெளியான மறுநாளே இந்தப்படத்தின் திருட்டு விசிடி வெளியானது.

அதில் ஒன்றை வாங்கி UFO நிறுவனத்தினரிடம் கொடுத்து அது எந்த தியேட்டரில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டது என்று கண்டுபிடித்ததில் அது தேனியில் உள்ள சுந்தரம் தியேட்டர் என தெரிய வந்தது. எனவே சுந்தரம் தியேட்டார் உரிமையாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.. எங்களுக்கான் உரிய நஷ்ட ஈடு கிடைக்க வழிசெய்யவேண்டும்” என அந்தப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.