ட்ரெய்லரிலேயே எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ‘திருடன்-போலீஸ்’..!

நல்ல படங்களாக மட்டுமே தயாரிக்க கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் எஸ்.பி.பி.சரண் தயாரித்துள்ள படம் தான் ‘திருடன் போலீஸ்’. அட்டகத்தி’ தினேஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப்படத்தை கார்த்திக் ராஜூ என்பவர் இயக்கியுள்ளார். அட்டகத்தி, ரம்மி புகழ் ஐஸ்வர்யா கதாநாயகியாக நடிக்க, பாலசரவணன், நிதின் சத்யா, ஆடுகளம் நரேன், ஒசான் விஜய் ஆகியோர் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்திருக்கிறார்.

‘ஒரு பானை சோற்றுக்கு……” என்கிற பழமொழி ‘திருடன் போலீஸ்’ பட விஷயத்தில் உண்மையாகிவிடும்போல இருக்கிறது. அதை இன்று நடைபெற்ற அந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் காண முடிந்தது. வெற்றிமாறன், எஸ்.பி.ஜனநாதன், எம்.ராஜேஷ், ஞானவேல்ராஜா, ‘அட்டகத்தி’ ரஞ்சித், நந்திதா என திரையுலக பிரபலங்கள் அணிவகுத்த ‘திருடன் போலீஸ்’ இசைவெளியீட்டு விழாவில் திரையிட்டுக் காட்டப்பட ட்ரெய்லர்… சும்மா சொல்லக்கூடாது.. மிரட்டல் ரகம்..

அதிலும் “யாருடா அந்த விஷ்வா… அவன் அக்யூஸ்ட்டை அடிக்கிற அடியில என் அடிவயிறு கலங்குது” என போலீஸ் அதிகாரி ராஜேந்திரநாத் சொல்லும் காட்சியும் தொடர்ந்து ‘நான் கடவுள்’ ராஜேந்திரனுக்கு அட்டகத்தி தினேஷ் விடும் அ(இ)டியும் இந்தப்படம் காமெடியையும் தாண்டி ஆயிரம் வாலா ஆக்ஷன் படம் என்பதை சொல்லிவிட்டது. இந்தப்படம் தினேஷுக்கு முக்கியமான படம் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.