இயக்குநர் ராமுக்கும் யுவனுக்கும் அவமரியாதை செய்த விஜய் டிவி..!

தேசியவிருது, தமிழக அரசு விருது, ஃபிலிம்ஃபேர் விருது இதற்கு அடுத்தபடியாக திரையுலக கலைஞர்கள் மிக முக்கியமாக கருதுவது விஜய் விருதைத்தான். கடந்த ஏழு வருடங்களாக வெகு விமரிசையாக நடந்துவரும் இந்த விஜய் விருது வழங்கும் விழா இந்த வருடம் 8ஆம் ஆண்டு ஜூலை-5ஆம் தேதி மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ராம் இயக்கிய ‘தங்கமீன்கள்’ படத்திற்கு சிறந்த படம் என்ற விருது வழங்கப்பட்டது. எல்லோரும் விருது கிடைத்ததும் விருது கொடுத்தவர்களை ஆஹா..! ஓகோ..! என புகழ்ந்து தள்ளுவார்கள். ஆனால் இயக்குனர் ராம் விருதை வாங்கிக்கொண்டு நெஞ்சை உருக்கும் கருத்துகளை தெரிவித்துள்ளார். அனேகமாக இந்த நிகழ்ச்சியை டிவியில் ஒளிபரப்பும்போது ராம் பேசியவற்றை விஜய் டிவி நிர்வாகத்தினர் வெட்டிவிடுவார்கள். அதனால் ராம் என்ன பேசினார் என்பதை இங்கே தருகிறோம்.

‘தங்க மீன்கள்’ படத்தில் ராமுக்கு மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் சாதனா கடந்த ஒரு வாரமாக நான் சென்னை வரட்டுமா? எனக்கு விருது தராங்களா என ராமுக்கு அடிக்கடி போன் செய்துள்ளார். உனக்கு எந்த விருதும் தரவில்லை, தங்கமீன்கள் படத்திற்கு மட்டுமே விருது தராங்க என ராம் கூறியுள்ளார். அதற்கு சாதனா எனக்கு நேஷனல் அவார்ட் குடுத்துருக்காங்க… விஜய் அவார்ட்ஸ் தரமாட்டாங்களா… ‘தெய்வத்திருமகள்’ படத்தில் நடித்த சாராவுக்கு விஜய் அவார்ட்ஸ் குடுத்தாங்களே, அந்த மாதிரி எனக்கும் தர மாட்டாங்களா என ராமிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு சிந்திக்க வைத்துள்ளது அந்த குழந்தை. இதை அப்படியே மேடையில் சொல்லி விஜய் டிவியின் முகத்திரையை கிழித்துள்ளார் ராம்.

மேலும் தங்கமீன்கள் படத்திற்கு உயிர்கொடுத்ததே ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்ற பாடல் தான். ஆனால் அந்த பாடல் நாமினி லிஸ்டில் கூட சேர்க்கப்படவில்லை அவ்வளவு தரம் கெட்ட பாடலா அது என கேள்வியை எழுப்பிவுடன் ஒரு நிமிடம் அரங்கமே ஆடிப்போய்விட்டது. மேலும் அந்த பாடலை ஒருமுறை ஒலிபரப்புங்கள் நான் கேட்கவேண்டும் என கேட்டுக்கொண்டார் ராம். உடனே கோபிநாத், “சார் அந்த பாடல் இல்லையென்று நினைக்கின்றேன்” என மழுப்பலான பதிலை தெரிவித்தார். ஆனால் ராம் “அந்த பாடலை பாடத்தெரிந்தவர்கள் யாராவது இந்த விழாவில் உள்ளீர்களா?” எனக் கேள்வியை எழுப்பினார்.

எப்படியாவது ராமை மேடையைவிட்டு இறக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கோபிநாத் அந்த பாடல் வேறு ஒரு லிஸ்ட்டில் நாமினியாகி உள்ளது எனக்கூறினார். ஆனால் அந்த பாடல் எந்த லிஸ்டிலும் இல்லையென்று எனக்கு தெரியும் என ராம் தெரிவித்தார். வேறுவழியில்லாமல் கூட்டத்தில் இருந்த ஒருவர் அந்த பாடலை பாடிக்காட்டினார். அவர் பாடிமுடித்ததும் ‘தங்கமீன்கள்’ படத்திற்கு உயிர்தந்த என் தோழன் யுவன்சங்கருக்கு இந்த விருதை சமர்பிக்கின்றேன் எனக்கூறி யுவனை மேடைக்கு அழைத்து அவரை கவுரவித்தார் ராம்.

ராமின் இந்த தைரியமிக்க செயலால் வெட்கிதலைகுனிந்தனர் விஜய்டிவியினரும் விருதுகொடுத்த குழுவினரும். டிஆர்பி ரேட்டிங் வேண்டும் என்பதற்காக பெரிய நடிகர்களுக்கு விருதுகளை வழங்கி பணம் சம்பாதிக்க நினைக்கும் தொலைக்காட்சிகளுக்கு சாதனாவின் கேள்விகள் நிச்சயம் சாட்டையடி.