நடிகர் ஆர்யா தயாரித்து, அவர் சகோதரர் சத்யா நடித்திருக்கும் திரைப்படம் “அமர காவியம்”. இத்திரைப்படத்தினை “நான்” படத்தை இயக்கிய ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். இப்படத்தில் மியா கதாநாயகியாகவும், தம்பி ராமையா, ஆனந்த் நாக், அருள் ஜோதி, எலிசபெத், வைத்தியநாதன், ரிந்து ரவி என பலர் நடித்துள்ளனர். “வாகை சூட வா” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான எம்.ஜிப்ரான் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
“அமர காவியம்” திரைப்படத்தின் இசை வெளியீடு இன்று (28 ஜூன் 2014) அன்று காலை சென்னையிலுள்ள சத்தியம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இசை வெளியீட்டுக்கு இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் திரைத்துறையை சார்ந்த பிரபலங்கள் வந்திருந்தனர். அவர்களில் இயக்குனர்கள் பார்த்திபன், விஜய், பிரபு சாலமன், விஷ்ணுவர்தன், பாலா, ராஜேஷ், லிங்குசாமி, S P ஜனநாதன், கண்ணன், சுசீந்திரன், நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், சாந்தனு பாக்யராஜ், விக்ராந்த், விஷ்ணு, ஸ்ரீகாந்த், நடிகைகள், நயன்தாரா, த்ரிஷா, ரூபா மஞ்சரி, லேகா வாஷிங்டன், பூஜா, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.வி.பி ராஜீவ், கே.எஸ்.சீனிவாசன், யு.டி.வி தனஞ்செயன் ஆவர்.
விழாவில் பேசிய தனஞ்செயன் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஆர்யாவை புகழ்ந்து பேசினார். தனஞ்செயன் கூறியதாவது, “ஆர்யா தயாரிப்பாளர்களுக்கு துணையாக நிற்பவர். நான் தூர்தர்ஷனுக்கு கூட அவரை கூப்பிட்டு போயிருக்கிறேன்” என தூர்தர்ஷனுக்கு ஆர்யாவை பேட்டிக்கு அழைத்து சென்றதை மிக கேவலமாக குறிப்பிட்டார். தூர்தர்ஷன் இந்தியாவில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட தொலைக்காட்சி என்பதும் அரசு விழாக்கள் அனைத்துக்கும் அவர்களுக்குத்தான் முதலில் உரிமை கொடுக்கப்படுவதும், பாராளுமன்றம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சிமையங்களுக்குள் அவர்களுக்கு மட்டுமே செய்தி சேகரிக்க உரிமை கொடுக்கப்படுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தனஞ்செயன், தான் அவ்வப்போது செய்திகளில் இடம்பெறவேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட வார்த்தைகள் விடுவது சகஜம்.
விழா இறுதியில் “அமர காவியம்” இசை தகட்டினை இயக்குனர் பாலா முன்னிலையில் நயன்தாரா வெளியிட த்ரிஷா பெற்றுக்கொண்டார்.