சர்வதேச சிலை கடத்தலைப் பற்றிய “களவு தொழிற்சாலை”

unnamed (33)

எம்.ஜி.கே மூவி மேக்கர் சார்பில் எஸ்.ரவிசங்கர் தயாரிக்கும் படம் “களவு தொழிற்சாலை”. ஜெய்ருத்ரா (கதிர்) – வம்சி கிருஷ்ணா இருவரும் இணைந்து நடிக்கும் இந்த படத்தில், கதாநாயகியாக மும்பையை சேர்ந்த குஷி அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் களஞ்சியம் நடிக்க, நட்ராஜ் பாண்டியன், செந்தில், ரேணுகா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ரத்னவேலுவின் உதவியாளர் வி.தியாகராஜன் ஒளிப்பதிவு. ஹாரீஷ் ஜெயராஜிடம் பணியாற்றிய ஷியாம் பெஞ்சமின் இசை. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் T.கிருஷ்ணசாமி.

படம் பற்றி இயக்குனர் கூறும்போது, “சர்வதேச சிலை கடத்தல்காரன் ஒருவனின் பயணம் தான் இந்த படத்தின் கரு. கதையின் முக்கிய பகுதி கோவிலின் உள்ளேயும், சுரங்கத்தின் உள்ளேயும் நடைபெறுவதாக உள்ளதால் கோவில்களையும், சுரங்கங்களையும் தேடி அலைந்த படக்குழு கிட்டத்தட்ட பன்னிரெண்டாயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து இருகிறார்கள்.

தென்னகத்தில் உள்ள பாழடைந்த புழக்கத்தில் இல்லாத பல சுரங்கங்களை  வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் எடுத்த பின்பு அதை வைத்து தொல்பொருள் ஆராய்ச்சி குழுவைச் சேர்ந்த சிலருடன் ஆலோசனை நடத்தி அவர்கள் கூறிய சில வரலாற்றுக் குறிப்புகளை வைத்து தீவிரமாக அலசி இருநூறு அடி நீளத்திற்கு அமைக்கப்படிருகிறது சோழர்கால சுரங்கம் செட்.

200 அடி நீளமுள்ள அந்த சுரங்கத்தில் இரவு, பகல் என்று பத்துக்கும் மேற்பட்ட நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். காற்றும் ஒளியும் புகமுடியாதபடி அமைக்கப்பட்ட  அந்த சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்தி முடிப்பதற்குள் படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் மிக சிரமப்பட்டனர்.

சுரங்கத்தின் நுழைவு வெளிப்பகுதி யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதால் கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாழடைந்த நிலையில் இருக்கும் ஒரு சாதுக்கள் மண்டபத்தை பல மாதங்களாக அலைந்து தஞ்சை பகுதியில் தேடி கண்டுபிடித்து படமாக்கினோம். அந்த பாழடைந்த மண்டபத்திற்கு அருகில் உள்ள அந்த கிராம மக்களே மண்டபத்திற்குள் சென்று பல தலைமுறை ஆகிவிட்டது என்று கூறினார்கள்” என்றார்.