அழகிரியின் பின்னால் இருப்பது பாஜகவா? இந்த ஆண்டின் பெரிய ஜோக்- தமிழிசை..!

அழகிரியின் பின்னால் பாஜக இருப்பதாக கூறப்படுவது இந்த ஆண்டின் பெரிய ஜோக் என்று தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து திமுகவுக்குள் அதிகார போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் படி கருணாநிதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்திய அழகிரி குட்டையை குழப்பினார்.

அப்போது அவர் பேசுகையில் திமுக தலைவர் கருணாநிதியிடம் எனது ஆதங்கத்தை தெரிவித்தேன். கலைஞரின் உடன்பிறப்புகள் என் பக்கம்தான் உள்ளனர். திமுகவுக்கு நான் வருவது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை.

திமுகவுக்கு வந்தால் வலிமையான தலைவனாகிவிடுவேன் என்ற அச்சம் சிலருக்கு உள்ளது என்று அழகிரி தெரிவித்தார். இதையடுத்து அழகிரி இவ்வாறு பேசுவதற்கு பின்னணியில் பாஜக இருப்பதாக திக தலைவர் கி.வீரமணி, திமுக நிர்வாகிகள் கூறினர்.

திமுகவில் பிளவு ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர் என்று செயற்குழு கூட்டத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் குற்றம்சாட்டினார். இதே போல் நமக்கு எதிராக செயல்படும் உறவை கண்டித்து துண்டியுங்கள் என்று ஜெ.அன்பழகன் எம்எல்ஏ ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில் அழகிரிக்கு பின்னால் பாஜக இருப்பதாக கூறுவது என்பது இந்த ஆண்டின் மிகப் பெரிய ஜோக் ஆகும். திமுக உடைய அக்கட்சியினரே காரணமாக இருப்பர்.

21 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடத்தி வரும் நிலையில் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தமிழிசை தெரிவித்தார். முன்னதாக அழகிரி பேட்டியை தொடர்ந்து தமிழிசை கூறுகையில் சூரியன் மறைந்தவுடன் நட்சத்திரங்கள் வெளியே வர பார்க்கின்றன என்று கூறியிருந்தார்.

Leave a Response