ஒரு ஆண், ஒரு பெண், ஒரு பங்களாவில், ஒரு திகில் படம்!!

vithaiyadi

இரண்டே இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே நடிக்கும் படம் வித்தையடி நானுனக்கு. பானுமுரளி – சோலை இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குகிறார் ராமநாதன் கே பகவதி.

படத்தை பற்றி இயக்குனர் கூறியபோது, “இது ஒரு சைக்கோ திரில்லர் படம். இதுல கதாநாயகன் கதாநாயகி என்று இல்லை. இரண்டு கதாபாத்திரங்கள் அவ்வளவே. ஒரு ஆண், ஒரு பெண் இருவரைச் சுற்றியும் கதை நடக்கிறது. பெண் கதாபாத்திரத்தில் அமெரிக்காவில் பிரபல நாடக நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் செளரா சையத் நடித்திருக்கிறார். அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் தமிழை மிகவும் சரளமாக எழுத, வாசிக்க மற்றும் பேசவும் செய்கிறார்.

ஆண் கதாபாத்திரத்தை நானே ஏற்று நடிக்க வேண்டியதாகிவிட்டது. சில நடிகர்களை அணுகினோம். அவர்களது தேதி ஒத்து வரவில்லை. ஸ்ட்ரைட்டா நடிக்க வந்து விடுவதாக சிலர் கூறியும் நான் ஒத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் படப்பிடிப்புக்குச் செல்லும் முன் ஒத்திகை எடுக்க வேண்டியிருந்தது. வேறு வழியில்லாமல் நானே அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து விட்டேன்.

நாயகன் – நாயகி இல்லை என்பதால் டூயட்லாம் இல்லை. ஆனால் பாடல்கள் இருக்கின்றன. எங்களது கதைக்கும் கிளாசிக்கான ரொமான்ஸ் சூழ்நிலைக்கும் ஏற்ற பாடலைத் தேடிய போது மகாகவி பாரதியின் பாயும் ஒளி நீ எனக்கு என்கிற பாடல் எங்களுக்காகப் பாடப்பட்டது போலவே இருந்தது. அந்தப் பாடலுக்கு மேற்கத்திய நாட்டுப்புற இசையில் அற்புதமாக இசையமைத்திருக்கிறார். அது தவிர இரண்டு சிறிய பாடல்கள் இருக்கின்றன. எல்லாமே மாண்டேஜில் தான் படமாக்கியிருக்கிறோம்.

படத்தின் கதை, வீட்டை விட்டு ஓடி வரும் பெண். வழியில் அவளது கார் பழுதாகி விடுவதால் ஆண் கதாபாத்திரம் லிஃப்ட் கொடுக்கிறது. கார் நேராக கொடைக்கானலில் ஒரு பங்களாவுக்குள் செல்கிறது. அங்கு நடக்கும் திகிலான கதைதான் வித்தையடி நானுனக்கு

முழுப்படத்தையும் முடித்து ரஃப் கட் பண்ணிய பிறகு படம் 2.45 மணி நேரம் ஓடியது. படம் முழுவதும் இரண்டு பேர் பேசும் வசனங்களையும் உணர்ச்சிகளையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைந்திருப்பதால் இன்னும் கொஞ்சம் குறைத்து 1.40 மணி நேரத்தில் ரசிகர்களுக்கு ஒரு விறுவிறுப்பான சைக்கோ திரில்லராக கொண்டு வர இருக்கிறோம். விவேக் நாராயணின் பின்னணி இசையும் ராஜேஷ் கடம்கோட்டின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரும் பலம் சேர்க்கப் போகிறது.

ரெண்டு நடிகர்கள் தாம் என்றாலும். ஒளிப்பதிவாளர், ஒப்பனைக் கலைஞர், உடை என்று ஆரம்பித்து உதவி இயக்குனர் வரை கிட்டத்தட்ட 30 பேர் 25 நாட்கள் இரவு பகலாக உழைத்துப் படப்பிடிப்பு நடத்தி வந்தோம்…

படப்பிடிப்பு முடிந்து ஐ.எஸ்.ஆர்.செல்வகுமார் மேற்பார்வையில் எடிட்டிங் உட்பட படப்பிடிப்பிற்கான பிந்தைய வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் மாதம் திரைக்குக் கொண்டு வரமுயற்சி செய்து கொண்டிருக்கிறோம்” என்றார்.