“புதுச்சேரியில்” இரட்டை வரியை நீக்கும் வரை ‘போராட்டம்’.தொடரும் திரையரங்கு மூடல்..!

புதுச்சேரியில் இரட்டை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்குகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 8-வது நாளாக நீடித்து வருகிறது. அரசு எந்தவித உத்தரவாதமும் தராததால் போராட்டம் தொடர்கின்றது. புதுச்சேரியில் இரட்டை வரியை நீக்கும் வரை திரையரங்கை திறக்க மாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள திரையரங்கங்கள் 25 சதவீதம் கேளிக்கை வரியை, கடந்த 2017 ஜூலை 1 வரையில், புதுச்சேரி அரசிடம் செலுத்தி வந்தனர். அதன் பிறகு, மத்திய, மாநில அரசின் உத்தரவுப்படி, மத்திய அரசின் ஜி.எஸ்.டி., கேளிக்கை வரியாக 28 சதவீதம், மாநில அரசுக்கு 25 சதவீதம் என, மொத்தம் 53 சதவீதம் செலுத்தி வந்தார்கள். இந்த நிலையில் இரட்டை வரி செலுத்தத் தொடங்கினர்.

திரையரங்கங்கள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து மாநில அரசுக்கு செலுத்தி வந்த 25 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்யக் கோரி புதுச்சேரி திரையரங்க உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து இருந்தார்கள். ஆனால் புதுச்சேரி அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் புதுச்சேரியில் கடந்த 16-ம் தேதி முதல் அனைத்து திரையரங்குகளும் காலவரையரையின்றி மூடப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் தமிழக அரசு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு போராட்டத்தைக் கைவிட்டு திரையரங்குகள் இன்று திறக்கப்பட்டன. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இந்த இரட்டை வரி விதிப்பு தொடர்பாக மாநில அரசு இது வரை எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. மேலும் இவர்களின் கோரிக்கை குறித்து எந்தவித உத்தரவாதமும் கொடுக்காததால் போராட்டம் தொடரும் என திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர் இதனால் திரையரங்குகள் வெறிச்சோடி காணப்படுகின்றது.

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தலைவர் லக்கி பெருமாள் கூறுகையில், “புதுச்சேரியில் இரட்டை வரி நீக்கும் வரை திரையரங்குகள் திறக்கப்படாது” என்று தெரிவித்தார்.

திரையரங்கு மூடலால் அரசுக்கு நாள் ஒன்றுக்கு 3 லட்சம் ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 8-வது நாளாக இன்று தொடரும் போராட்டத்தால் புதுச்சேரி அரசுக்கு 24 லட்சம் ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Response