தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஒகி புயலால் தென் மாவட்டங்கள் மிகக் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டம் துண்டிக்கப்பட்டு, தனித் தீவாக மாறியுள்ளது. புயல், மழையால் தென் தமிழகத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, கேரளா நோக்கி நகர்ந்த ஒகி புயல், அங்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய பின், தற்போது குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைப் பதம்பார்த்துவருகிறது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஒகி புயல், தற்போது அரபிக்கடலைக் கடக்கிறது. இதனால், இன்று காலையிலிருந்து மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்துவருகிறது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டல நிலையால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த இரண்டு நாள்களுக்கு லேசான மழை பெய்யும்” எனக் கூறப்பட்டுள்ளது.