தீபாவளி பண்டிகை இந்த மாதம் வருவதால், கடந்த மாதத்தில் தங்கம் இறக்குமதி 31 சதவீதம் அதிகரித்துள்ளது.பண்டிகை சீசனில் தங்கம் விற்பனை அதிகமாக இருக்கும். அதிலும், போனஸ் போன்றவற்றால் மக்களிடையே பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். இதனால், மற்ற பண்டிகைகளை விட தீபாவளி சமயத்தில் மக்கள் தங்கத்தில் அதிகம் முதலீடு செய்வார்கள். இதை கருத்தில் கொண்டு நகை வியாபாரிகள் தங்கத்தை அதிகம் இறக்குமதி செய்கின்றனர்.
கடந்த மாதம் நவராத்திரி, தசரா பண்டிகைகள் வந்தன. இருந்தும் நகை விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதற்கு பண பரிவர்த்தனை மோசடி சட்ட விதிகள், தங்க விற்பனைக்கும் நீட்டிக்கப்பட்டதே காரணம்.
கடந்த ஆகஸ்ட் முதல் இது அமலுக்கு வந்தது. இந்த சட்டப்படி 50,000க்கு மேல் நகை வாங்கினால் பான், ஆதார் கார்டு கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். இதனால் வருமான வரி கெடுபிடிக்கு பயந்து நகை வாங்க மக்கள் முன்வரவில்லை. இரண்டு சவரனுக்கு மேல் நகை வாங்கினாலே இந்த மதிப்பு வந்து விடுவதால், கெடுபிடியை தளர்த்த வேண்டும் என நகை வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர்.50,000க்கு மேல் நகை வாங்குவோர் பான் கார்டு, ஆதார் எண் சமர்ப்பிக்க தேவையில்லை என ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. இதனால் நகை வியாபாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனால் இந்த தீபாவளி பண்டிகைக்கு விற்பனை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
இதற்கேற்ப செப்டம்பரில் தங்கள் இறக்குமதி அதிகரித்துள்ளது. இதுகுறித்து தாம்சன் ராய்டர்ஸ் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி செப்டம்பரில் தங்கம் இறக்குமதி 31 சதவீதம் அதிகரித்துள்ளது என கூறியுள்ளது. இந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி சுதீஷ் நம்பியாத் கூறுகையில், செப்டம்பரில் சுமார் 48 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது என்றார். கடந்த ஆண்டு செப்டம்பரை விட இது அதிகம் என்றாலும், இந்த ஆண்டில் இதுவரை இறக்குமதி செய்த தங்கத்தின் மாத சராசரி அளவான 75 டன்களை விட குறைவுதான். இருப்பினும் வங்கிகளிலும் தீபாவளியை முன்னிட்டு தங்கக்கட்டிகள், நாணயங்கள் விற்பனை செய்யப்படும் என்பதால், இந்த மாதம் இறக்குமதி மேலும் உயர்ந்து 70 டன்களாக இருக்கும் என தாம்சன் ராய்டர்ஸ் தெரிவித்துள்ளது.