போர் பதட்டம் காரணமாக இம்ரான் கானை விடுவிக்க கட்சியினர் கோரிக்கை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தஹ்ரிக் – இ – இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் கடந்த 2023 ஆம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டு உட்பட பல்வேறு அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே தற்போது போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அவரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இம்ரான் கானை விடுதலை செய்ய வேண்டும் என பி.டி.ஐ. கட்சி சார்பில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: “போர் பதற்றம் காரணமாக அடியாலா சிறை மீது டிரோன் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் அரசியல் நோக்கம் கொண்ட வழக்குகள் காரணமாக நீண்டகாலமாக காவலில் வைக்கப்படுவது பி.டி.ஐ. கட்சி தலைவர் இம்ரான் கானின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அத்தகைய தடுப்புக் காவலைத் தவிர்ப்பதற்காக பரோலில் விடுதலை செய்யும் தீர்வை அரசியலமைப்பு வழங்குகிறது. காவலில் இருந்தபோது இம்ரான் கான் சிறை விதிகளை மீறவில்லை என்றும், நீண்டகால சிறைவாசம் காரணமாக இம்ரான் கானின் உடல்நலம் மோசமடையும் அபாயம் உள்ளது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது பாகிஸ்தானில் கடும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை நிலவி வருவதாகவும், இம்ரான் கானை விரைவில் பரோலில் விடுவிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த மனு மீதான விசாரணை எப்போது நடைபெறும் என்று தேதி குறித்த அறிவிப்பை நீதிமன்றம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response