கலெக்டராக நயன்தாரா… வடசென்னையில் குத்துச் சண்டை!

Nayanthara-Natraj Gopi
இயக்குநர் ந.கோபிக்கு அறிமுகம் தேவை இல்லை. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ‘கத்தி’ படத்தின் கதை தன்னுடையது என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவர். அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது நயன்தாரா நடிக்கும் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். படத்தில் நயனுக்கு மாவட்ட ஆட்சியர் வேடமாம்.  படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துகொண்டு இருக்கும் நிலையில் தன் அடுத்த படத்துக்கான வேலைகளைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் ந.கோபி. இது வட சென்னையை மையமாக வைத்து எடுக்கப்படும் ஒரு தலித் சினிமாவாம்.

ஒரு காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு வேலை செய்ய தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட தலித் மக்கள் வடசென்னைப் பகுதிகளில்  குடியமர்த்தப்படுகின்றனர். அவர்களில், ஆங்கிலேயே உயர் அதிகாரிகளுடன் பழகியவர்கள் கிரிக்கெட் விளையாட்டையும்,ஆங்கிலேயே அதிகாரிகளுக்கு குமாஸ்தா நிலையில் பணிபுரிந்தவர்கள் பாக்ஸிங், புட்பால் போன்ற விளையாட்டுக்களையும் கற்றுக்கொள்கிறார்கள்.

இப்படி தொடங்கிய வடசென்னை பாக்ஸிங் விளையாட்டு, இடியப்ப நாயக்கர் பரம்பரை, சார்பட்டா பரம்பரை ஆகிய இரு பாக்ஸிங் பரம்பரையினர் மூலம் வளர்க்கப்படுகிறது. இந்தப் பரம்பரைகள் மூலம் தலித் இளைஞர்கள் தலைமுறை தலைமுறைகளாக எவ்வாறு பாக்ஸிங் கற்றுக்கொள்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு வரும் எதிர்ப்பும்தான் இந்தப் படத்தின் கதையாம். இது வட சென்னையில் உள்ள குத்துச் சண்டை வீரர்களைப் பற்றிய வரலாற்று ஆவணமாக இருக்குமாம்.

இந்தப் படத்தின் ஹீரோவாக ஒரு தலித் இளைஞனையே நடிக்க வைக்க இருக்கிறாராம் கோபி. இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பாக்ஸர்களை அழைத்து அதில் ஒருவரை ஹீரோவாகத் தேர்ந்தெடுத்து இருக்கிறார். விரைவில் படப்பிடிப்புத் தொடங்கப்பட உள்ளது. ‘குத்துச் சண்டை’ அல்லது ‘குத்துச்சண்டை பரம்பரை’ இந்த இரண்டு தலைப்புகளில் ஏதாவது ஒன்றுதான் இந்தப் படத்தின் தலைப்பாக இருக்கும், படம் குறித்து  அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தினர்.

Leave a Response