‘நனையாத மழையே’ விழாவில் சூர்யா, நா.முத்துக்குமாருக்கு குட்டு வைத்த புலவர் புலமைப்பித்தன்…!

சேரன் பாண்டியன், கோகுலம் உட்பட பல படங்களில் இனிமையான பாடல்களை தந்தவர் இசையமைப்பாளர் சௌந்தர்யன். ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் ‘நனையாத மழையே’ படத்தில் இசையமைத்திருக்கிறார். முற்றிலும் புதுமுகங்களை வைத்து உருவாகியுள்ள இந்தப்படத்தை மகேந்திரன் என்பவர் இயக்கியுள்ளார்.

நேற்று மாலை இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மூத்த கவிஞர்களான புலவர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் அறிவுமதி, இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன், கானா பாலா, பட்டியல் சேகர், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் புலவர் புலமைப்பித்தன் பேசும்போது, “சமீபத்தில் “ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி’ன்னு ஒரு பாடலை கேட்டேன்.. ஏற்கனவே நம்ம பிரதமர் மோடி, இந்தியை திணிக்கனும்னு ஆர்வமா இருக்கார்.. மோடிக்கு உதவி செய்யுற மாதிரி நம்ம ஆட்களே இப்படி இந்தியில பாடினா என்ன செய்றது..? ரொம்ப வருத்தமான விஷயம் இது.. இனி வரும் காலத்தில் இதுபோன்று பிறமொழிகளில் பாடல்களை எழுதுவதை தவிர்க்க வேண்டும்” என அஞ்சான் படத்தில் இடம்பெற்ற பாடலுக்காக அதை எழுதிய நா.முத்துக்குமாருக்கும், பாடிய சூர்யாவுக்கும் செல்லமாக குட்டுவைத்தார்.