ராஜேஸுக்கு கிடைக்காதது ரஞ்சித்திற்கு கிடைத்தது..!

இயக்குனர் ராஜேஸ் அலட்டிக்கொள்ளாமல் ஜாலியான படங்களை இயக்குபவர். அதனால் அவரது படம் ஒன்றில் நடித்து நம் கலரையும் கொஞ்சம் மாற்றிக்கொள்ளலாமே என ஆக்ஷன் ஹீரோக்கள் கூட நினைத்தார்கள். அப்படித்தான் கார்த்தியை வைத்து அவர் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தை இயக்கியதும்.

அந்தப்படம் வளர்ந்துவந்த நிலையில் அவரது அடுத்த படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக ஒரு பேச்சும் எழுந்தது. அனால் ‘அழகுராஜா’ படத்தின் ரிசல்ட் அந்த திட்டத்தை முடக்கிவிட சூர்யாவும் வெங்கட்பிரபு, விக்ரம் கே.குமார் என ரூட் மாறிவிட்டார்.

அதன்பிறகு கார்த்தி ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்துவந்தபோது படமாக்கப்பட்ட சில காட்சிகளை பார்த்த சூர்யா ரஞ்சித்தின் மேக்கிங்கில் கவரப்பட்டு அவருடன் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற முடிவு செய்தாராம். அதுமட்டுமல்ல, ‘மெட்ராஸ்’ படத்தின் ஸ்கிரிப்ட் ஸ்டுடியோகிரீன் வந்தபோது முதலில் சூர்யாவின் கைகளுக்கு போய், பின்னர் அவர் சிபாரிசில்தான் கார்த்தியின் கைக்கு போனது குறிப்பிடத்தக்கது.

அதற்கேற்ற மாதிரி ‘மெட்ராஸ்’ படம் சூப்பர்ஹிட்டாகி விட ரஞ்சித்தை வேறு எந்தப்பக்கமும் கவனத்தை திருப்பவிடாமல் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கு அளித்து ஒப்பந்தத்தை போட்டு அவரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார் சூர்யா.