“கொலைவெறி பிடிச்சு அலையவேண்டி இருக்கு” – இயக்குனர் எழில்

விஜய்யை வைத்து தனது முதல் படமாக ‘துள்ளாத மனம் துள்ளும்’ படத்தின் மூலம் களமிறங்கியவர் இயக்குனர் எழில். தொடர்ந்து அஜித்தை வைத்து இரண்டு படங்களை இயக்கிய இவர், 15 வருடங்களாகியும் இன்றைய யூத் ட்ரெண்டிற்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக்கொண்டு பீல்டில் நின்று அசத்துகிறார்.

சிவகார்த்திகேயனை வைத்து ‘மனம் கொத்தி பறவை’ படத்தை இயக்கிய எழில் தற்போது விக்ரம் பிரபுவை வைத்து ‘வெள்ளைக்கார துரை’ என்கிற முழுநீள நகைச்சுவை படத்தை இயக்கிவருகிறார். ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். ஏன் காமெடிப்படங்களில் இறங்கிவிட்டீர்கள் என ஒரு வார இதழில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் சொன்னவிதம் தான் பகீர் ரகம்.

“இப்போ காமெடி தேவையா இருக்கு.. அதுமட்டுமல்லாம, ஆக்ஷன் படம் பண்ணினா அப்படியே கோபமா, டென்ஷனா என்னை நானே மாற்றவேண்டியிருக்கு. கொலைவெறி பிடிச்சு அலையவேண்டியிருக்கு. என்னோட சுபாவத்துக்கு காமெடி கலந்த மெசேஜ் சொல்ற படங்கள் இப்போ போதும்னு நினைக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.. ஆக்ஷன் படம் இயக்குனா கொலைவெறியோட அலையனுமா.. நல்ல கதையா இருக்கே..!