மீண்டும் மகேஷ்பாபு ரசிகர்களின் தாக்குதலில் சிக்கினார் சமந்தா..!

கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடிகை சமந்தா தனது சமூக வலைதளத்தில் அந்த சமயத்தில் வெளியான மகேஷ்பாபுவின் ‘1-நேனொக்கடினே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து “ரொம்பவும் பிற்போக்குத்தனமாக இருக்கிறது” என்று கமெண்ட் தெரிவித்தார்.. அவ்வளவுதான் பொங்கி எழுந்த மகேஷ்பாபுவின் ரசிகர்கள், “சமந்தா கெட் லாஸ்ட்” என தங்களது கருத்துக்களை சமந்தாவுக்கு எதிராக பதிவு செய்ய ஆரம்பித்து விட்டனர்.

சமந்தா அப்படி சொன்னதற்கு காரணம் அந்த போஸ்டரில் மகேஷ்பாபு நடந்து செல்வது போலவும் அவரை பின் தொடர்ந்து அவரது காலடியில் படத்தின் கதாநாயகி கவர்ச்சி உடையில் தரையில் தவழ்ந்தபடி செல்வது போலவும் இருந்தது.

ஆனால் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிலிம்பேர் விருது வழங்கும் விழாவுக்கு வந்திருந்த மகேஷ்பாபுவின் அருகில் சென்று அவரிடம் சிரித்துப்பேச ஆரம்பித்ததோடு, மகேஷ்பாபுவுக்கு அருகில் இருந்த இருக்கையிலேயே உட்கார்ந்தும் விட்டார் சமந்தா.

சரி இருவரும் ராசியாகிவிட்டார்களே என நினைத்த வேளையில் ‘அஞ்சான்’ படத்தில் சமந்தாவின் கவர்ச்சிகரமான பிகினி உடை போஸ்டர்களை பார்த்து கொதித்துப்போன மகேஷ்பாபுவின் ரசிகர்கள் இப்போது மீண்டும் சமந்தாவை சமூக வலைதளத்தில் இப்போது நீ மட்டும் யோக்கியமா என்கிற ரேஞ்சில் தங்களது கமெண்ட்டுகளால் தாக்க ஆரம்பித்துள்ளனர்.

மழை விட்டாலும் தூவானம் விடாது என்று சொல்வார்களே.. சமந்தா விஷயத்தில் அது நன்றாகவே பொருந்துகிறது.