Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: 22 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த நீதி!

On April 29, 2025
WhatsApp Image 2025-04-28 at 22.56.26
Share

உச்சநீதிமன்றம் இன்று கடலூர் மாவட்டத்தில் நடந்த ஒரு ஆணவக் கொலைக்கு அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டையே அதிரவைத்த இந்த கொடூர சம்பவம் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே அமைந்துள்ளது குப்பநத்தம் முந்திரிக்காடு.

இந்த குப்பநத்தம் முந்திரிக்காடு புதுக்காலனியைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மகன் முருகேசன். சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு படித்து வந்தார். இதே அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அதே ஊரைச் சேர்ந்த துரைசாமியின் மகள் கண்ணகி படித்து வந்தார்.

பட்டியலினத்தைச் சேர்ந்த முருகேசனும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கண்ணகியும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்தனர். கல்லூரி சென்றபோதும் அவர்களது காதல் தொடர்ந்தது. இவர்களது காதலுக்கு எப்படியும் இரு வீட்டாரின் சம்மதமும் கிடைப்பது சாத்தியமில்லை என்பதை இருவரும் உணர்ந்தனர். இதனால், வீட்டை விட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்து கடந்த 2003ம் ஆண்டு ஜுலை 5ம் தேதி சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

தகவல் அறிந்த கண்ணகியின் குடும்பத்தினர் கொதித்தெழுந்துள்ளனர். முருகேசனைத் தேடி ஜுலை 6ம் தேதி அலைந்துள்ளனர். முருகேசனின் தந்தையிடம் முருகேசன் எங்கே என்று கேட்டு கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனும், அவரது உறவினர்களும் தாக்கியுள்ளனர். அப்போது, அங்கே வந்த முருகேசனின் தம்பி வேல்முருகனை அடித்து உதைத்துள்ளனர். மேலும், முருகேசன் வந்தால் மட்டுமே அவனது தம்பியை விடுவோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.


வேல்முருகனை காப்பாற்றுவதற்காக முருகேசனின் சித்தப்பா, விருத்தாச்சலம் வண்ணான்குடிகாட்டில் இருந்த முருகேசனை குப்பநத்தத்திற்கு அழைத்து வந்தார். ஊருக்கு வந்த முருகேசனை கண்ணகியின் உறவினர்கள் அடித்து உதைத்து காதல் திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் அளவிற்கு கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலை ஒட்டுமொத்த ஊரே நின்று வேடிக்கைப் பார்த்துள்ளது.

அத்தனை துன்பங்களிலும் கண்ணகி எங்கே இருக்கிறார் என்பதை முருகேசன் சொல்லாமலே இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் முருகேசனை கயிற்றில் கட்டி தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு தலையை கீழே அடித்து உடைத்தபோதுதான் கண்ணகி எங்கே என்பதை முருகேசன் கூறியிருக்கிறார்.

கண்ணகி இருக்கும் இடம் அறிந்த அவரது நண்பர்கள் அவரையும் அழைத்து வந்துள்ளனர். ஒட்டுமொத்த குப்பநத்தம் முந்திரக்காடும் நின்று வேடிக்கை பார்க்க கண்ணகியையும், முருகேசனையும் சொல்ல முடியாத சித்ரவதைகளால் கொடுமைப்படுத்தியுள்ளனர். கடைசியில் இரண்டு பேரின் காதுகளிலும், மூக்கிலும் விஷத்தை ஊற்றி கொலை செய்தனர். இந்த கொலைச் சம்பவத்திற்கு பிறகே தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலை என்ற வார்த்தை புழக்கத்திற்கு வரத் தொடங்கியது.


இந்த கொடூர கொலை அரங்கேறிய 10 நாட்களுக்குப் பிறகே காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். முதலில் தற்கொலை என்று பதியப்பட்டு பின்னர் கண்ணகியை அவரது குடும்பத்தினரும், முருகேசனை அவரது குடும்பத்தினரும் கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கண்ணகியின் அப்பா துரைசாமி, கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டி, அவர்களது உறவினர்கள் இருவர், முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு, சித்தப்பா அய்யாசாமி, அவர்களது உறவினர் 2 பேர் என 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நடந்த ஓராண்டுக்குப் பிறகு இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு வந்தது.


பின்னர், சிபிஐ விசாரணையில் உண்மைகள் வெளிவர முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு, முருகேசனின் சகோதரி தமிழரசி, முருகேசனின் தம்பி வேல்முருகன், பழனிவேலு ஆகியோர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர்.

இந்த வழக்கை தவறான கோணத்தில் கொண்டு சென்ற அப்போதைய விருத்தாச்சல காவல் ஆய்வாளர் தமிழ் மாறன், உதவி ஆய்வாளர் செல்லமுத்து இருவரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த முருகேசன் குடும்பத்தினர் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை அடிப்படையில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட 15 பேரில் 12 பேருக்கு ஆயுள் தண்டனை கடந்த 2021ம் ஆண்டு கடலூர் சிறப்பு நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டது. கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றவாளிகள் தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் மருதுபாண்டியனின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது. மேலும், காவல் ஆய்வாளர் தமிழ் மாறன் மீதான ஆயுள் தண்டனையை வேறு ஒரு பிரிவில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையாகவும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறைத் தண்டனையாகவும் மாற்றி உத்தரவிட்டனர். இந்த நிலையில் இன்று நீதிமன்றம் இவர்களது தண்டனையை மீண்டும் உறுதி செய்துள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.