கங்கை அடி வாரத்தில் ரயில்வே தண்டவாளம்!

ஹரித்வாரில் பாயும் கங்கை நதிக்கு நீர் கொண்டுவரப்படும் கங்கை கால்வாய் (கேங் கால்வாய்) மூடப்பட்டதை அடுத்து ஹர் கி பைடி மற்றும் விஐபி படித்துறைகளில் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. அவ்வப்போது இது நடக்கக்கூடிய நிகழ்வுதான். அப்படி வறண்டு காட்சியளிக்கும்போது படித்துறைகளின் அடிவாரம் காட்சியளிக்கும். ஆனால், இம்முறை ரயில் தண்டவாளங்கள் தென்படுகின்றன. இது தற்போது மக்களின் ஆர்வத்திற்குரிய விஷயமாக மாறியுள்ளது. கங்கைக்குக் கீழே ரயில் பாதைகள் அமைக்கப்பட்டிருந்தனவா என்பதை மக்கள் அறிய விரும்புகிறார்கள்.
இந்தப் படித்துறையில் இருந்து 3 கி.மீ தொலைவில் தான் ஹரித்வார் ரயில் நிலையம் உள்ளது. இதனால், படித்துறை இருக்கும் இடத்தில் முன்பு சிறிய ரயில்கள் ஓடியதாக சிலர் பேசுகிறார்கள். இதே கங்கைக்கு அடியில் தென்படும் ரயில் பாதையை வைத்து பல்வேறு வதந்திகள் வெளியாகிவருகின்றன.
உண்மை என்ன?: ஹரித்வாரைச் சேர்ந்த ஆதேஷ் தியாகி இதுதொடர்பாக பேசுகையில், "1850 ஆம் ஆண்டு கங்கை கால்வாய் கட்டும் போது, கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல கை வண்டிகள் பயன்படுத்தப்பட்டன. கை வண்டிகள் இந்த இரும்பு வழித்தடங்கள் வழியாக கொண்டுச் செல்லப்பட்டன" என்றுள்ளார்.
அதேநேரம் வரலாற்று ஆய்வாளர் சஞ்சய் மகேஸ்வரி இதுதொடர்பாக பேசுகையில், "கங்கை கால்வாய் டல்ஹவுசி பிரபுவின் முக்கிய திட்டங்களில் ஒன்று. இது அப்போதே பொறியாளர் கோட்லே மேற்பார்வையில் கட்டப்பட்டது. இதுபோன்ற பல பெரிய கட்டுமானங்கள் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டன. அவை தற்போதைய நவீன இந்தியாவில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்தியாவின் முதல் ரயில் பாதை ரூர்க்கி கேலியருக்கு அருகில் அமைக்கப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இருப்பினும், அது முதல் ரயில் பாதையாக அங்கீகரிக்கப்படவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் கங்கை கால்வாய் பராமரிப்புக்காக உத்தரபிரதேச நீர்ப்பாசனத் துறையால் மூடப்படுகிறது. அப்படி மூடப்படுவது ஹரித்வாரின் பார்வையை முற்றிலும் மாற்றுகிறது. கங்கையின் அடிவாரத்தில் தெரியும் ரயில் தண்டவாளங்கள் போன்ற இந்த தடங்கள் ஆங்கிலேயர் கால தொழில்நுட்பங்களின் மாதிரி" என்று கூறியுள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
