மனைவியின் மீது சந்தேகம்: நண்பனின் உயிரை மாய்த்த அவலம்! மாதவரத்தில் பரபரப்பு!

சென்னை மாதவரம் சின்ன மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு வயது 43. இவருக்கு உமா என்ற பெண்ணுடன் 9 ஆண்டுகளுக்கு திருமணமாகி உள்ளது.
இவர்களுக்கு குழந்தைகள் ஏதும் இல்லை. மணிகண்டன் மாதவரத்தில் வெல்டர் வேலை செய்து வந்தார். இவருடைய மூத்த சகோதரர் முருகேசன் அதிமுக வட்ட பிரதிநிதியாக உள்ளார்.
மணிகண்டன் வீட்டின் அருகே வசித்து வருபவர் ஜெய பிரகாஷ். இவர் லாரி டிரைவராக உள்ளார். ஜெய பிரகாஷ் , மணிகண்டனும் சிறு வயது முதல் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஜெய பிரகாஷ் தனது மனைவி, மணிகண்டன் உடன் கள்ள தொடர்பில் உள்ளதாக சந்தேகமடைந்து அடிக்கடி தனது மனைவியுடன் சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் ஜெய பிரகாஷின் மனைவி கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்கு தனது இரண்டு பிள்ளைகளுடன் சென்று அங்கு வசித்து வருகிறார்.
இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ஜெய பிரகாஷ் தனது மனைவி தன்னிடம் சண்டை போட்டு விட்டு தாய் வீட்டுக்கு சென்றதற்கு மணிகண்டன் தான் காரணம் என நினைத்து மணிகண்டன் உடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் இதுகுறித்து மணிகண்டன் குடும்பத்தினர் இரண்டு முறை மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் ஜெய பிரகாஷ் மீது புகார் அளித்துள்ளனர். போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேசி சமரசம் செய்து அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு மணிகண்டன் தனது வீட்டின் அருகே வழக்கம் போல் உட்கார்ந்து இருந்த போது ஜெய பிரகாஷ் தனது இரண்டு நண்பர்களுடன் வந்து மணிகண்டனை பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர் மாதவரம் பால் பண்ணை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மாதவரம் பால் பண்ணை போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மணிகண்டணை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி மணி கண்டன் உயிரிழந்தார்.
இதனை அடுத்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து இருந்த போலீசார் கொலை வழக்காக மாற்றி தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள ஆந்திரா பேருந்து நிலையத்தில் வெளியூர் தப்பி செல்ல பதுங்கி இருந்த ஜெய பிரகாஷ் , சரண்ராஜ் , வினோத் குமார் ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்த 3 பட்டா கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனையடுத்து மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த மாதவரம் பால் பண்ணை போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
