கைமாறிய கேப்டன் கல்லூரி! கடுப்பான தேமுதிக தொண்டர்கள்!

மறைந்த முன்னாள் தேமுதிக தலைவரான கேப்டன் விஜயகாந்த்க்கு சொந்தமான மிகப்பெரிய பொறியியல் கல்லூரி தான் செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூரில் அமைந்துள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி.
25 ஏக்கர் நிலத்தில் மொத்தமாக 4 லட்சத்து 38 ஆயிரம் சதுர அடி பரப்பில் கட்டிடங்கள் அமைந்துள்ளன.
சுமார் 25 ஆண்டுகளாக இந்த கல்லூரி வெற்றிகரமாக இயங்கி வந்தது.
அதே சமயம் விஜயகாந்த் குடும்பம் சற்று கடன் நெருக்கடியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆண்டாள் அழகர் கல்லூரி அறக்கட்டளை பெயரில் வாங்கிய 5.52 கோடி கடனுக்காக கல்லூரி உள்பட விஜயகாந்துக்கு சொந்தமான சொத்துக்களை ஏலமிடப் போவதாக 2019ஆம் ஆண்டு சென்னை அண்ணா சாலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு தேமுதிகவினருக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது.
இதுதொடர்பாக அப்போது விளக்கம் அளித்த பிரேமலதா, விஜயகாந்த் படங்களில் நடிக்கவில்லை என்பதால் பெரிய அளவில் வருமானம் இல்லை, சேவை மனப்பான்மையுடன் தொடங்கப்பட்ட கல்லூரியின் மேம்பாட்டிற்காக ரூ.5 கோடி அளவில் கடன் பெறப்பட்டது, இருப்பினும், தற்போதைக்கு கடன் தொகையை செலுத்த முடியவில்லை. சட்ட ரீதியாக இதனை சந்திப்போம் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை தனலட்சுமி சீனிவாசன் குழுமம் கையகப்படுத்தியுள்ளது. பெரம்பலூரை மையமாகக் கொண்டு இயங்கும் தனலட்சுமி சீனிவாசன் குழுமம் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளை நிர்வகித்து வருகிறது. திருச்சி, சென்னை பகுதிகளிலும் கல்லூரிகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் ரூ.150 கோடிக்கு மேல் கைமாறி இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனலட்சுமி சீனிவாசன் குழுமம் வெளியிட்ட அறிவிப்பில், "தனலட்சுமி சீனிவாசன் குழுமத்தின் மற்றும் ஓர் அங்கம். செங்கல்பட்டு, ஸ்ரீ ஆண்டாள் அழகர் கல்லூரி, இப்போது துடிப்பான மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட தமிழகத்தின் முன்னோடி கல்வி நிறுவனமான தனலட்சுமி சீனிவாசன் குழுமத்தின் கீழ் புதுப்பொலிவுடன் இயங்க உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆயிரக்கணக்கான பிரகாசமான எதிர்காலங்களை வடிவமைக்கும் பெருமைமிக்க நிறுவனங்களின் வலையமைப்புடன், இந்த சமீபத்திய சேர்க்கை, புதுமை, உள்கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை தரும் கல்வியில் தொடர்ந்து பயணிக்கும். உலகத்தரம் வாய்ந்த கல்வியை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான எங்கள் நோக்கத்தின் ஒரு பகுதியாக பிற பிராந்தியத்திற்கும் அதற்கு அப்பாலும் கல்வியின் கலங்கரை விளக்கமாக மாற்ற இது சாத்தியப்படுத்தி இருக்கிறது" என்று தெரிவித்துள்ளது.
ஆண்டாள் அழகர் கல்லூரி கைமாறியுள்ளது தேமுதிகவினருக்கும், விஜயகாந்த் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
