Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தவெக மாநாட்டுக்கு இன்னும் 5 நாட்கள் : ஏற்பாடுகள் எந்த அளவில் உள்ளன?

On October 21, 2024
WhatsApp Image 2024-10-21 at 20.46.45
Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல் தான் தன்னுடைய இலக்கு என முழு மூச்சாக செயல்பட்டு வரும் அவர், கட்சி தொடர்பான பணிகளை தொடங்கி மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வருகிறார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த மாநாட்டுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த அக்டோபர் முதல் வாரம் பூமிபூஜை நடத்தப்பட்டது. அப்போது கூடிய தொண்டர்கள் கூட்டம், மாநாட்டு மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. மாநாடு தொடர்பாக தொண்டர்களுக்கு விஜய் 2 முறை கடிதம் எழுதியுள்ளார். கண்ணியமாக மாநாட்டை நடத்த வேண்டும், அனைவரின் பாதுகாப்பும் மிக முக்கியம், மற்ற அரசியல் கட்சியினருக்கும் நாம் யாரென்று காட்ட வேண்டும் என்ற ரீதியில் அவர் எழுதியுள்ள கடிதமும் மிகுந்த பாராட்டைப் பெற்றது.

இப்படியான நிலையில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி 160 அடி நீளம், 20 அடி உயரத்தில் மாநாட்டு பந்தலில் மேடை அமைக்கப்படுகிறது. மினி சட்டப்பேரவை போல அமைக்கப்படவுள்ள மேடைக்கு முக்கிய நிர்வாகிகள் மட்டுமே செல்லும் வகையில் 12 அடி உயரத்தில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாடு நடைபெறும் நாளில் திடலுக்கு எந்தவித வாகனமும் அனுமதிக்கப்பட மாட்டாது என காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விஜய் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாநாடு நடைபெறும் இடத்தில் அமைக்கப்படும் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் விஜய் பிரமாண்டமான கட்சிக் கொடியை ஏற்ற உள்ளார். அங்கிருந்து ராம்ப் வாக் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் நடந்து சென்று தொண்டர்களைப் பார்த்து கையசைக்க உள்ளார். மொத்த 50,000 பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் மாநாட்டில் அதற்கான இருக்கைகளும் சரியான அளவில் ஒதுக்கப்பட உள்ளது.

மேலும் ஒருவேளை விஜய்யின் அன்பான அறிவுரையையும் மீறி முதியவர்கள், கர்ப்பிணிகள், சிறுவர்கள் வந்தால் அவர்கள் அமர்வதற்கு என தடுப்புகள் போடப்பட்டு தனியாக இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மாநாடு பந்தல் அருகே தண்டவாளம் உள்ளதால் அந்த பக்கம் யாரும் செல்லாதவாறு தகரங்கள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டது. இதேபோல் அப்பகுதியில் உள்ள கிணறும் தற்காலிகமாக மூடப்படுகிறது.

கடந்த வாரம் பெய்த மழையால் மாநாடு நடைபெறும் மைதானம் சேறும், சகதியுமாக மாறிய நிலையில் அதனை முழுவதுமாக புதுப்பிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் வருகை தருவார்கள் என்பதால் மாநாடு நடைபெறும் இடத்திற்கு அருகில் 40 ஏக்கர் நிலமும் எதிர்புறத்தில் 120 ஏக்கர், கிழக்கொந்தையில் 40 ஏக்கர் என மொத்தம் 200 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டு பந்தலுக்குள் குடிநீர், கழிப்பறை வசதிகளும் போதுமான அளவில் செய்யப்படவுள்ளது.

விழுப்புரம் முக்கியமான போக்குவரத்து மிகுந்த இடம் என்பதால் மாநாடு நடைபெறும் நாள் அன்று எந்தவித போக்குவரத்து நெரிசலும் இல்லாத வகையில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாநாடு நிறைவு பெற்று ஒரே நேரத்தில் வாகனங்கள் வெளியேறும் போது விழுப்புரத்தில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் செஞ்சி வழியாகவும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வரக்கூடிய வாகனங்கள் கூட்டேரிபட்டியிலிருந்து திருவக்கரை வழியாகவும் விழுப்புரத்திற்கு திருப்பி விடப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநாடு சிறப்பாக நடைபெறவும் அங்கு வருகை தரும் தொண்டர்கள் பாதுகாப்பாக திரும்பிச் செல்லவும் தேவையான அனைத்து வசதிகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனாலும் மழை குறுக்கிடாமல் இருக்கணுமே..? என்று அவரது தொண்டர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்தும் வருகின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.