தமிழ் தாய் வாழ்த்து பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த திருமா! அதை முன்மொழிந்த சீமான்!

தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரத்தில் திராவிடர் மரபினம் என்ற கோட்பாட்டை விவரித்திருந்தார் திருமாவளவன்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், திராவிடம் என்பது மரபினம். தமிழர் என்பது தேசிய இனம். மரபினத்துக்குள்ளேயே இருக்கிற பல்வேறு தேசிய இனங்களில் ஒன்று தமிழினம். அவ்வளவுதான். இதனை நாம் வெவ்வேறாகப் பிரிக்கத் தேவை இல்லை. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களே, திராவிடம் என்றால் தமிழ்தான், திராவிட நாடு என்றால் தமிழ்நாடுதான், திராவிடத்தைப் பாதுகாப்போம் என்றால் தமிழைப் பாதுகாப்போம், தமிழர்களைப் பாதுகாப்போம் என்றுதான் பொருள் என கவிதைகளையும் பாடி இருக்கிறார்.
எனவே, அந்தக் காலச் சூழலில் மாநிலங்கள் பிரிக்காத காலத்தில், மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்படாத அந்தக் காலத்தில், மதராஸ் மாகாணம் என்ற போது திராவிட மொழிகள் என்ற அடிப்படையில் தென்னிந்திய மொழிகள் எல்லாம் அடையாளம் கண்டு இந்த பகுதியை திராவிட நிலம் என்று நம்முடைய முன்னோர்கள் அறிந்திருந்தனர்.
அதைவிட ஆரியத்துக்கு எதிரான கோட்பாடு திராவிடம்தான் என்பது பண்டிதர் அயோத்திதாசர் முன்மொழிந்த கோட்பாடு. பெரியாருக்கும் திராவிட கட்சிகளுக்கும் முன்னரே, திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தியவர் பண்டிதர் அயோத்திதாசர். ஆகவே இதை நாம் குழப்பிக் கொள்ள தேவை இல்லை. திராவிடர்கள் என்பது மரபினம், தமிழர்கள் என்பது தேசிய இனம் என கூறியிருந்தார்.
இந்த கருத்து குறித்து கரூரில் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சீமான், நான் பேசுகிற இந்த அரசியலுக்கே குருநாதர் அண்ணன் திருமாவளவன், மருத்துவர் அய்யா ராமதாஸ். திராவிடர் மரபினம் என்கிற அவரது கோட்பாட்டை மதிக்கிறேன். அவரது நிலைப்பாடு அது. இது பற்றி திரும்ப திரும்ப பேசிக் கொண்டிருக்க வேண்டியது இல்லை. இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
