கள்ளக்காதல் விவகாரம்: மாமியாரை எரித்துக் கொன்ற மருமகள்!

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்துள்ள, என்.ஆர்.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கு ராணி என்ற மனைவியும், கருணாமூர்த்தி என்ற மகனும் உள்ளனர்.
கடலூர் அரசுக் கல்லூரியில் படித்த கருணாமூர்த்தி, அதே கல்லூரியில் படித்த 23 வயதான சுவேதாவை காதலித்து வந்துள்ளார். சுவேதா, பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் 12-ம் தேதி, இருவரும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், கருணாமூர்த்தி செங்கல்பட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். மேலும் அவரின் தந்தை பாண்டியன், சென்னையில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.
இதனால், என்.ஆர்.பாளையம் வீட்டில் சுவேதாவும், மாமியார் ராணியும் மட்டும் தனியாக இருந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த அக்டோபர் 30-ம் தேதி இரவு, வீட்டின் வராந்தாவில் மாமியார் ராணியும், அறையில் சுவேதாவும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர் பாராத விதமாக, ராணியின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. அவரது அலறல் சத்தம் கேட்டு அறையை விட்டு வெளியே வந்த மருமகள் சுவேதா, `காப்பாத்துங்க… காப்பாத்துங்க…' என்று அலறியுள்ளார். இருவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், தீயை அணைத்து, ராணியை கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் ராணிக்கு 80% சதவிகிதத்திற்கு மேல் தீக்காயங்கள் இருந்ததால், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் அவர் சிகிச்சைப் பலனின்றி 31-ம் தேதி உயிரிழந்தார். தனது தாயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ராணியின் இளைய மகனும், கருணாமூர்த்தியின் தம்பியுமான தட்சிணாமூர்த்தி, கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் சுவேதாவிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சுவேதா தன்து காதலனுடன் சேர்ந்து மாமியார் ராணியை, பெட்ரோல் ஊற்றிக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அதையடுத்து சுவேதாவையும், எதிர்வீட்டில் வசித்து வந்த அவரது காதலன் சதீஷ் என்பவரையும் விசாரித்ததில், “மாமியார் வேலைக்கு செல்வதால், வீட்டில் தனியாக இருக்கும் என்னிடம் சதீஷ்குமார் அன்பாக பேசினார். என்னை அடிக்கடி அவரது பைக்கில் பாண்டிச்சேரிக்கு அழைத்துச் செல்வார்.
இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருப்போம். சம்பவத்தன்று, நாங்கள் உல்லாசமாக இருப்பதை எனது மாமியார் பார்த்துவிட்டார். அதையடுத்து என்னை கடுமையாக திட்டிய அவர், தீபாவளிக்கு ஊருக்கு வரும் என் கணவரிடம் இதுபற்றி கூறுவதாக தெரிவித்தார். இதனால் சதீஷ் பெட்ரோல் வாங்குவதற்காக 500 ரூபாய் பணம் கொடுத்து உன் மாமியாரை எரித்து விடு என்று கூறினார். அதனால் நானும் எரித்து விட்டேன். மாமியாரின் அலறல் சத்தம் கேட்டு, சதீஷ் எதுவும் தெரியாதது போல் மாமியாரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் என்று கூறியுள்ளார். திருமணமான மூன்றே மாதத்தில், மாமியாரை மருமகளே உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம், கடலூரில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
