Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மாநிலங்களவை எம்.பி. ஆகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?

On February 26, 2025
8d4019eb-781f-4d0b-98f1-3021e5cea5e2
Share
ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனரும், டெல்லியின் முன்னாள் முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலங்களவை எம்.பியாக ஆக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக மாநிலங்களவை எம்.பி. சஞ்சீவ் அரோராவை ராஜினாமா செய்ய வைத்து, அவரை மேற்கு லூதியானா இடைத் தேர்தலில் போட்டியிட வைக்க ஆம் ஆத்மி முடிவு செய்து வேட்பாளராகவும் அறிவித்துள்ளது. டெல்லியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 இடங்களைக் கைப்பற்றி 25 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி அமைத்தது. ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களுடன் பிரதான எதிர்க்கட்சியானது. அந்தக் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவராக ஆதிசி தேர்ந்தெடுக்கப்பட்டார். புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் 4089 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் பர்வேஷ் சிங்கிடம் தோல்வி அடைந்தார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஷீலா தீக்சித் மகன் சந்தீப் சீக்சித் 4568 வாக்குகள் மட்டுமே பெற்றார். இந்த வாக்குகளை காங்கிரஸ் கட்சி பிரிக்காமல் இருந்திருந்தால், கெஜ்ரிவால் வென்றிருப்பார். இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலை பஞ்சாப் வழியாக மாநிலங்களவை எம்.பியாக்க ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக லூதியானா மேற்கு தொகுதி எம்எல்ஏ குருப்ரீத் சிங் மறைவால் நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட மாநிலங்களவை எம்.பி. சஞ்சீவ் அரோராவை வேட்பாளராக ஆத்மி நிறுத்தியுள்ளது. மேற்கு லூதியானா இடைத்தேர்தல் வேட்பாளராக சஞ்சீவ் அரோரா போட்டியிடும்பட்சத்தில் அவர் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார். அந்த பதவிக்கு அரவிந்த் கெஜ்ரிவாலை பரிந்துரைக்கவும் ஆம்ஆத்மி திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்முறையாக நாடாளுமன்றத்துக்குள் நுழைய உள்ளார். சஞ்சீவ் அரோராவின் பதவிக்காலம் 2028ம் ஆண்டுதான் முடிகிறது, இன்னும் ஏறக்குறைய 3 ஆண்டுகள் அரவிந்த் கெஜ்ரிவால் எம்.பி பதவியில் தொடர முடியும். இடைத் தேர்தலில் வேட்பாளராக அரோரா நிறுத்தப்பட்டால் எம்.பி.பதவியை கண்டிப்பாக ராஜினாமா செய்ய வேண்டும், அந்தப் பதவிக்கு கெஜ்ரிவால் பரிந்துரைக்ப்படுவார். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா கூறுகையில் ' மேற்கு லூதியானா தொகுதி ஆம்ஆத்மி எம்எல்ஏ குருபிரீத் சிங் மறைவால் இந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தொகுதியில் போட்டியிட கெஜ்ரிவால் முதலில் திட்மிட்டிருந்தார். ஆனால், பஞ்சாப் மக்கள் வேறுமாநிலத்தவரை ஏற்கமாட்டார்கள் என்பதால், ஆம்ஆத்மி எம்.பி. சஞ்சீவ் அரோராவை வேட்பாளராக நியமித்து, அந்த எம்.பி. பதவிக்கு கெஜ்ரிவால் பரிந்துரைக்கப்பட உள்ளார். பஞ்சாப் ஆம் ஆத்மி அரசில் குழப்பங்கள் நீடிக்கன்றன. ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் காங்கிரஸுடன் தொடர்பில் உள்ளனர், ஆனால் முதல்வர் பகவந்த் சிங் மான் பாஜகவுடன் பேசி வருகிறார். அடுத்தமுறை ஆட்சிக்கு வரமுடியாத நினைப்பில் மீண்டும் சீட்டுக்காக காங்கிரஸில் பலர் சேர திட்டமிட்டுள்ளனர், பகவந்த் சிங் மான் பாஜகவில் சேர்ந்துவிடுவார்' எனத் தெரிவித்தார். மாநிலங்களவைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தேர்ந்தெடுக்கப்பட்டால், தொடர்ந்து சிங்கம் போல கர்ஜித்து வரும் பிரதமர் மோடி மற்றும் முக்கிய அமைச்சர்களுக்கு கிடுக்குபிடி கேள்விகளை எழுப்புவார் என எதிர்பார்க்கப்படுவதால் மாநிலங்களவையில் ஆளுங்கட்சிக்கு தலைவலியாகவே அரவிந்த் கெஜ்ரிவால் இருப்பார் என்று சொல்லப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.